இந்தூர்: சையத் முஷ்டாக் அலி தொடரில் பரோடா அணிக்காக விளையாடி வரும் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா, திரிபுரா அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒரே ஓவரில் 4 சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட 28 ரன்களை விளாசி மிரட்டியுள்ளார். இந்த சீசனில் 4 போட்டிகளில் விளையாடியுள்ள ஹர்திக் பாண்டியா 231 ரன்களை விளாசி இருப்பது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
பிசிசிஐ தேர்வு குழு தலைவார அஜித் அகர்கர் பொறுப்புக்கு வந்த பின், இந்திய வீரர்கள் அனைவரும் உள்ளூர் கிரிக்கெட்டில் கட்டாயம் விளையாட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட சீனியர் வீரர்கள் ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாடாமல் தவிர்த்து வந்தனர்.

இந்த நிலையில் சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா நீண்ட இடைவெளிக்கு பின் பரோடா அணிக்காக விளையாடி வருகிறார். இந்த சீசனில் ஹர்திக் பாண்டியா அபார ஃபார்மில் பேட்டிங் ஆடி வருகிறார். நம்பர் 4 வரிசையில் பேட்டிங் செய்ய களமிறங்கி வரும் அவர், இதுவரை 3 போட்டிகளில் விளையாடி 2 அரைசதம் உட்பட 74, 41 மற்றும் 69 என்று அதிரடியாக ரன்களை குவித்துள்ளார்.
இந்த நிலையில் திரிபுரா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பரோடா அணி விளையாடியது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய திரிபுரா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 109 ரன்களை சேர்த்தது. சிறப்பாக பவுலிங் செய்த ஆகாஷ் மகாராஜ் சிங் 4 ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதன்பின் களமிறங்கிய பரோடா அணி 11.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 115 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. சிறப்பாக ஆடிய ஹர்திக் பாண்டியா 23 பந்துகளில் 5 சிக்ஸ், 3 பவுண்டரி உட்பட 47 ரன்களை விளாசினார். அதிலும் ஸ்பின்னரான பர்வேஸ் சுல்தான் வீசிய ஒரே ஓவரில் 4 சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட 28 ரன்களை விளாசி தள்ளினார்.
இதன் மூலமாக சையத் முஷ்டாக் அலி தொடரில் 4 இன்னிங்ஸ்களில் விளையாடிய ஹர்திக் பாண்டியா 231 ரன்களை விளாசி இருக்கிறார். மொத்தமாக 20 சிக்ஸ் மற்றும் 15 பவுண்டரிகளை விளாசி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ஹர்திக் பாண்டியாவின் அபார ஆட்டத்தால் பரோடா அணி விளையாடிய 4 போட்டிகளில் அந்த அணி வெற்றியை பெற்றுள்ளது.