மும்பை: மும்பை அணியின் பேட்டிங் ஆர்டரை பார்க்கும் போது அந்த அணியால் ஒவ்வொரு போட்டியில் எளிதாக 230 முதல் 240 ரன்களை விளாச முடியும் என்று புரிய வந்துள்ளதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். அதேபோல் ஃபினிஷிங் ரோலில் ஹர்திக் பாண்டியா தனித்து இருப்பது மட்டும் சிக்கல் என்றும் விமர்சித்துள்ளார்.
2020ஆம் ஆண்டுக்கு பின் 4 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரை வெல்ல முடியாமல் மும்பை அணி திண்டாடி வருகிறது. இந்த நிலையில் மெகா ஏலத்தில் மும்பை அணி நிர்வாகிகள் மிகச்சிறந்த வீரர்களை வாங்கி இருக்கின்றனர். வில் ஜாக்ஸ், ரியான் ரிக்கல்டன், ராபின் மின்ஸ், தீபக் சஹர், போல்ட், கரண் சர்மா, சான்ட்னர் என்று அசரடிக்கும் வீரர்களை வாங்கி குவித்துள்ளனர்.

அதேபோல் மும்பை அணியின் பேட்டிங் ஆர்டரை பற்றி யாருக்கும் சொல்லி தெரிய வேண்டியதில்லை. ரோஹித் சர்மா, வில் ஜாக்ஸ், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ராபின் மின்ஸ் மற்றும் ரிக்கல்டன் ஆகியோர் இருக்கின்றனர். இதனால் எவ்வளவு பெரிய இலக்கையும் மும்பை அணியால் எளிதாக சேஸ் செய்ய முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் மும்பை அணி குறித்து ஆகாஷ் சோப்ரா பேசுகையில், மும்பை அணியின் பேட்டிங் ஆர்டரை கொஞ்சம் பாருங்கள்.. அவர்களால் வான்கடே மைதானத்தில் வேற லெவல் அட்டாக்கிங் ஆட்டத்தை விளையாட முடியும். அவர்களால் ஒவ்வொரு போட்டியிலும் 230 முதல் 240 ரன்களை வரை குவிக்க முடியும் என்று நினைக்கிறேன்.
ரோஹித் சர்மாவுடன் தொடக்கம் கொடுக்க 2 மாற்று வீரர்கள் இருக்கிறார்கள். ஒருவர் வில் ஜாக்ஸ், மற்றொருவர் ரியான் ரிக்கல்டன். அதேபோல் மும்பை அணியால் 2 வகையான பிளேயிங் லெவனை உருவாக்க முடியும். ரிக்கல்டனை களமிறக்கினால், சான்ட்னர் பெஞ்சில் இருக்க வேண்டும். சான்ட்னர் களமிறங்கினால், ரிக்கல்டன் பெஞ்சில் இருக்க வேண்டும். அதேபோல் மிடில் ஆர்டரில் நமன் திர் இருப்பார்.
இன்னொரு பக்கம் ராபின் மின்ஸ் விக்கெட் கீப்பராக கொண்டு வரப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. என்னை பொறுத்தவரை வில் ஜாக்ஸை தான் முதலில் ரோஹித் சர்மாவுடன் தொடக்க வீரராக விளையாட வைப்பேன். அதன்பின் சுர்யகுமார் யாதவ், திலக் வர்மா, நமன் திர், ஹர்திக் பாண்டியா வருவார்காள். பின்னர் ராபின் மின்ஸ், சான்ட்னர், சஹர் வரும் போது பேட்டிங் ஆர்டர் அச்சம் கொடுப்பதாக உள்ளது.
ஆனால் மும்பை அணியில் உள்ள ஒரேயொரு பிரச்சனை என்னவென்றால் அத்தனை பேட்ஸ்மேன்களும் டாப் 4ல் விளையாடக் கூடியவர்களாக இருக்கின்றனர். இதனால் ஹர்திக் பண்டியா மட்டுமே மிடில் மற்றும் ஃபினிஷிங் ரோலில் இருப்பார். பேட்ஸ்மேன்கள் தங்களின் பேட்டிங் வரிசையில் மாற்றம் செய்து சிறப்பாக விளையாடினால், அந்த அணிக்கு எந்த சிக்கலும் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.