ஜெட்டா: மும்பை அணிக்காக கடந்த 6 ஆண்டுகளாக விளையாடி வந்த இஷான் கிஷன், அடுத்த சீசனில் ரூ.11.25 கோடிக்கு ஐதராபாத் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு ரூ.3.2 கோடி வரை ஏலம் கேட்ட மும்பை அணி, ஆர்டிஎம் கார்டு கையில் இருந்த போதும் ஏன் பயன்படுத்தவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
2018ஆம் ஆண்டு மும்பை அணிக்காக இளம் வீரர் இஷான் கிஷன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அப்போது கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா, இஷான் கிஷன் தான் இந்திய அணியின் எதிர்காலம் என்று கூறியிருந்தார். இதனை நிரூபிக்கும் வகையில் மும்பை அணிக்காக இஷான் கிஷன் அடுத்தடுத்து தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இதனால் 2022 மெகா ஏலத்தில் அவரை வாங்க மும்பை அணி ரூ.15.25 கோடி செலவிட்டது.

ஆனால் கடந்த 3 ஆண்டுகளாகவே இஷான் கிஷனின் செயல்பாடுகள் மும்பை அணி எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. ஒரு சில போட்டிகளில் சிறப்பாக விளையாடினாலும், முக்கியமான போட்டிகளில் சொதப்பி வந்தார். இருந்தாலும், மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் ஆதரவு இருந்ததால், அவரை மும்பை அணி மீண்டும் ஏலத்தில் வாங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் ஜெட்டா நகரில் நடந்த மெகா ஏலத்தில் இஷானை கிஷனை வாங்க மும்பை அணி ரூ.3.2 கோடி வரை முன் வந்தது. பின்னர் பஞ்சாப் அணி பிடிவாதமாக இருக்க, மும்பை அணி விலகியது. பின்னர் இஷான் கிஷனை வாங்க பஞ்சாப் மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையில் போட்டி ஏற்பட்டது. இறுதியாக ஐதராபாத் அணி அவரை ரூ.11.25 கோடிக்கு வாங்கியது.
இதனிடையே மும்பை அணியின் கைகளில் ஒரு ஆர்டிஎம் கார்டு இருந்த போதும், இஷான் கிஷனுக்கு பயன்படுத்தவில்லை. இதனால் ரசிகர்கள் பலரும் குழப்பமடைந்தனர். இந்த நிலையில் ஐபிஎல் விதிகளின் படி மும்பை அணிக்கு 6 வீரர்களை தக்க வைக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது. எத்தனை வீரர்களை குறைவாக ரீடெய்ன் செய்கிறதோ, மெகா ஏலத்தில் அத்தனை ஆர்டிஎம் கார்டுகள் கிடைக்கும்.
இந்த 6 வீரர்களில் 5 சர்வதேச வீரர்கள் மற்றும் ஒரு உள்ளூர் வீரரை ரீடெய்ன் செய்யலாம். இதனால் 5 சர்வதேச வீரர்களை தக்க வைத்து, ஒரு உள்ளூர் வீரரை ரீடெய்ன் செய்யவில்லை என்றால், மெகா ஏலத்தில் அந்த ஒரு ஆர்டிஎம் கார்டை உள்ளூர் வீரருக்கு தான் பயன்படுத்த முடியும். இதன் காரணமாகவே மும்பை அணி இஷான் கிஷனுக்கு ஆர்டிஎம் கார்டை பயன்படுத்தவில்லை என்பது தெரிய வந்துள்ளது.