மும்பை: ஐபிஎல் மெகா ஏலத்தில் இளம் வேகப்பந்துவீச்சாளரான உம்ரான் மாலிக் அடிப்படை விலையான ரூ.75 லட்சத்திற்கு கேகேஆர் அணியால் வாங்கப்பட்டுள்ளார். கடந்த சீசன்களை போல் அல்லாமல் இம்முறை கேகேஆர் அணிக்காக முழு உழைப்பையும் கொடுத்து விளையாடுவேன் என்றும் உம்ரான் மாலிக் தெரிவித்துள்ளார்.
2021ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்காக அறிமுகமானவர் உம்ரான் மாலிக். மணிக்கு 150 கிமீ வேகத்திற்கும் கூடுதலாக வீசியதால், அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. விரைவாகவே இந்திய அணிக்குள் கொண்டு வரப்பட்ட அவர், எதிர்பார்த்த அளவிற்கு பவுலிங்கில் செயல்படவில்லை. உம்ரான் மாலிக்கிடம் வேகம் மட்டுமே இருப்பதால், இந்திய அணி அவரை கடந்து சென்றது.

இளம் வீரரான மயங்க் யாதவை போல் உம்ரான் மாலிக்கிடம் கட்டுப்பாடு இல்லை என்று பார்க்கப்படுகிறது. ஆனால் இம்முறை ஐபிஎல் மெகா ஏலத்தில் கேகேஆர் அணியால் அடிப்படை விலையான ரூ.75 லட்சத்திற்கு வாங்கப்பட்டிருக்கிறார். இதனால் உம்ரான் மாலிக்கின் பவுலிங்கில் மாற்றங்கள் வருமா என்ற கேள்விக்கு, கேகேஆர் அணியின் பவுலிங் பயிற்சியாளராக பரத் அருண் இருக்கிறார் என்பதே பதிலாகும்.
இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் உச்சத்திற்கு வருவதற்கு பரத் அருண் மிகமுக்கிய காரணமாக அமைந்துள்ளார். அதேபோல் ஒரு வீரரை எப்படி தயார் செய்ய வேண்டும் என்பதை நன்றாக அறிந்தவர் பரத் அருண். இதனால் உம்ரான் மாலிக்கிடம் எதிர்பார்க்கப்படும் வேகத்துடனான கட்டுப்பாடு மற்றும் வெரைட்டி இரண்டையும் அடுத்த ஐபிஎல் சீசனில் வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து உம்ரான் மாலிக் பேசுகையில், அடுத்த ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணியின் ஜெர்சியை அணிந்து விளையாடவுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. அந்த அணி நடப்பு சாம்பியன் என்ற பட்டத்துடன் களமிறங்கும். நிச்சயம் அடுத்த சீசனிலும் சாம்பியன் பட்டத்தை வெல்வோம். இந்த வாய்ப்பை வழங்கிய கேகேஆர் அணியின் நிர்வாகத்திற்கு நன்றிக்கடன்பட்டுள்ளேன்.
நிச்சயம் கேகேஆர் அணிக்காக விளையாட ஏராளமான வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதேபோல் 200 சதவிகிதம் உடற்தகுதியுடன் இருக்கிறார். வரும் ஐபிஎல் தொடரில் வேறு மாதிரியான உம்ரான் மாலிக்கை பார்ப்பீர்கள். இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி, இந்திய அணிக்குள் கம்பேக் கொடுக்க வேண்டும். ஐபிஎல் தொடரில் என்னைப் போல் ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கி வருகிறது.
இம்முறை அதிக விக்கெட்டுகளை வீழ்த்துவேன் என்ற நம்பிக்கை உள்ளது. என்னை பொறுத்தவரை வேகம் தான் த்ரில்லை கொடுக்கிறது. அதற்காக 160 கிமீ வேகத்தில் பவுலிங் செய்ய முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் வேகத்தின் மூலமாக நிறைய விக்கெட்டுகளை வீழ்த்துவேன் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்துள்ளார்.