பிர்மிங்காம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி பிர்மிங்காமில் உள்ள புகழ்பெற்ற எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் போட்டியின் பரபரப்பு ஒருபுறம் இருக்க, மைதானத்தில் உள்ள கிரிக்கெட் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் கடையில், ஐபிஎல் அணிகளின் உடைகள் அமோகமாக விற்பனையாகி வருவது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிகளின் ஜெர்சிகள் அதிக அளவில் ரசிகர்களால் வாங்கப்பட்டுள்ளன.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளின் டெஸ்ட் உடைகளைக் காட்டிலும், ஐபிஎல் அணிகளின் உடைகளே அதிக அளவில் அங்கு விற்பனையாகி இருந்தது, ஐபிஎல் தொடரின் தாக்கம் சர்வதேச கிரிக்கெட்டிலும் எதிரொலித்து வருவதை சுட்டிக்காட்டுகிறது. மேலும், சர்வதேச அளவில் ஐபிஎல் தொடர் முக்கியத்துவம் பெற்று இருப்பதையும் இது வெளிக்காட்டி இருக்கிறது.

இதில் மற்றொரு வேடிக்கையான நிகழ்வும் நடந்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் உடை மட்டும் அதிகம் விற்பனையாகவில்லை. ஆனால், சிஎஸ்கே, கொல்கத்தா அணிகளின் உடைகள் தவிர மற்ற அணிகளின் உடைகளும் ஓரளவுக்கு விற்பனையானதாகக் கூறப்படுகிறது.
சமீபத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ரசிகர்கள் கூட்ட நெரிசலில் பலியானதால், அந்த அணியின் உடை விற்பனையாகவில்லையா அல்லது ரசிகர்கள் அந்த அணிக்கு எதிரான மனநிலையில் இருக்கிறார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஐபிஎல் தொடர் சமீப காலமாக இங்கிலாந்து பிரீமியர் லீக் (EPL) எனும் கால்பந்து தொடரின் பார்வையாளர்களின் எண்ணிக்கையுடன் போட்டி போட்டு வருகிறது. இங்கிலாந்தில் ஐபிஎல் தொடரை ஒளிபரப்பும் ஸ்கை ஸ்போர்ட்ஸ் நிறுவனம், எந்த ஒரு சர்வதேச கிரிக்கெட் தொடரின் போது இருப்பதை விடவும், ஐபிஎல் தொடரின் போது சமூக வலைத்தளத்தில் மிகவும் அதிக பதிவுகளை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. விரைவில் ஐபிஎல் தொடர் சர்வதேச கிரிக்கெட் தொடர்களின் இடத்தைப் பிடித்து விடுமோ என்ற எண்ணத்தை இந்தச் சம்பவம் ஏற்படுத்தியிருக்கிறது.
எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 587 ரன்கள் சேர்த்தது. அடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி, 84 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இந்திய அணியில் முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.