மும்பை: கொல்கத்தா அணியின் சீனியர் வீரர்களான ஆண்ட்ரே ரஸ்ஸல் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகிய இருவரையும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. புதிய தலைமைப் பயிற்சியாளராக அபிஷேக் நாயர் பொறுப்பேற்றுள்ள நிலையில், இவர்கள் இருவரையும் ரிலீஸ் செய்ய அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் 2ஆவது வாரத்தில் நடக்கவுள்ளது. இம்முறை பல்வேறு அணிகளில் இருந்து முக்கிய வீரர்கள் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ராஜஸ்தான் அணியில் இருந்து கேப்டன் சஞ்சு சாம்சன், ஐதராபாத் அணியில் இருந்து இஷான் கிஷன், சிஎஸ்கே அணியில் இருந்து கான்வே, சாம் கரண், டெல்லி அணியில் இருந்து ஸ்டப்ஸ் உள்ளிட்டோர் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

ஐபிஎல் மினி ஏலத்திற்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருப்பதால், ரீடெய்ன் செய்யப்படாத வீரர்களுடன் அணி நிர்வாகங்கள் பேச்சுவார்த்தை நடத்த தொடங்கிவிட்டன. அந்த வகையில் கேகேஆர் அணியில் இருந்து ரஸ்ஸல் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகிய இருவரையும் விடுவிக்க அந்த அணி நிர்வாகம் முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஐபிஎல் தொடரில் ஆடத் தொடங்கிய காலம் முதலே ரஸ்ஸல் மற்றும் வெங்கடேஷ் ஐயர் இருவரும் கேகேஆர் அணிக்காக மட்டுமே விளையாடி வருகின்றனர். கடந்த சீசனில் ரஸ்ஸல் ரீடெய்ன் செய்யப்பட்ட நிலையில், வெங்கடேஷ் ஐயர் ரூ.23 கோடிக்கு கேகேஆர் அணியால் வாங்கப்பட்டார். ஆனால் எதிர்பார்த்த ஃபார்ம் இல்லாததால், அவர் பல போட்டிகளில் பெஞ்ச் செய்யப்பட்டார்.
இதனால் இம்முறை வெங்கடேஷ் ஐயரை விடுவிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் புதிய அணியை கட்டமைக்க வேண்டிய பொறுப்பு அபிஷேக் நாயருக்கு இருப்பதால், அவர் கொஞ்சம் கூடுதல் பர்ஸ் தொகையுடன் செல்லலாம் என்று முடிவு எடுத்துள்ளார். இந்த இரு வீரர்களையும் ரிலீஸ் செய்தாலே, கேகேஆர் அணி ரூ.35 கோடியுடன் ஐபிஎல் மினி ஏலத்தில் பங்கேற்க முடியும் என்று தெரிகிறது.