சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே கேப்டன் தோனி ஒரு மகத்தான சாதனையை படைக்க உள்ளார். இரு அணிகளும் மோதும் ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இன்றைய ஆட்டத்தில் கேப்டனாக களமிறங்குவதன் மூலம் சிஎஸ்கே அணியை 200 வது போட்டியில் தலைமை தாங்கும் பெருமை தோனிக்கு கிடைத்துள்ளது.
இதன் மூலம் ஒரு அணியை ஐபிஎல் தொடரில் 200 முறை தலைமை தாங்கிய முதல் கேப்டன் என்ற பெருமையை தோனி பெறுகிறார். சிஎஸ்கே அணியை தவிர புனே அணிக்கும் தோனி கேப்டனாக இருந்துள்ளார். ஒட்டுமொத்தமாக ஐபிஎல் தொடரில் 236 போட்டிகளில் தோனி விளையாடி உள்ளார்.தோனி இதில் 213 முறை கேப்டன் ஆக பணியாற்றி இருக்கிறார்.

கடந்த சீசனில் தோனி சில போட்டிகளில் சாதாரண வீரராக விளையாட ஜடேஜா கேப்டன் பணியை சில போட்டிகளில் செய்தார். 213 போட்டியில் கேப்டனாக விளையாடியுள்ள தோனி, 125 வெற்றிகளும் 87 தோல்விகளையும் நான்கு முறை ஐபிஎல் கோப்பையையும் வென்று கொடுத்திருக்கிறார்.
ஐபிஎல் போட்டிகளில் அதிக வெற்றி விகிதத்தை கொண்ட கேப்டன் என்று பெருமையும் தோனிக்கு உள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜடேஜா, தோனி சிஎஸ்கேவின் கேப்டனாக 200 போட்டியில் விளையாடும் மிகப்பெரிய சாதனை படைக்கப் போகிறார். அவருக்கு எங்களுடைய வாழ்த்துக்கள். தோனிக்கு இன்றைய ஆட்டத்தில் நாங்கள் வெற்றியை பரிசாக அளிக்க விரும்புகிறோம்.

தோனி சிஎஸ்கே அணிக்கு மட்டும் ஜாம்பவான் அல்ல, அவர் ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட்டுக்கு ஜாம்பவானாக விளங்குகிறார் என பாராட்டியுள்ளார். கடந்த இரண்டு போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும், அதை தொடர நாங்கள் முயற்சி செய்கிறோம் என்றும் ஜடேஜா கூறியுள்ளார். இதேபோன்று சிஎஸ்கே அணி ஆல் ரவுண்டர் ஸ்டோக்ஸ், ராஜஸ்தான் எதிராக களம் இறங்க மாட்டார் என்றும் மோயின் அலி உடல் நலம் சரியாகி விட்டதால் அவர் விளையாட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் ஜடேஜா கூறியுள்ளார்.