டெல்லி: 2025 ஐபிஎல் தொடரில் கே எல் ராகுல் முதல் இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவர் இந்த முறை டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இடம் பெற்று இருக்கிறார். அவர் கேப்டன் பொறுப்பை ஏற்க மறுத்த செய்தி முன்பே வெளியாகியிருந்தது.
தற்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக அக்சர் படேல் செயல்பட இருக்கிறார். கே எல் ராகுல் அணியின் முக்கிய பேட்ஸ்மேனாக செயல்படுவார் என்று எதிர்பார்ப்பு இருந்த நிலையில், தற்போது அவர் அந்த அணியின் முதல் இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவலை யார் சொன்னது என்பதுதான் மிகவும் ஆச்சரியப்படக்கூடிய விஷயம். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி வீராங்கனையான அலிசா ஹீலி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியின் போது, "டெல்லி கேப்பிடல்ஸ் வீரர் கே எல் ராகுல் முதல் இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் என நினைக்கிறேன். அவர் முதல் குழந்தையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்" என குறிப்பிட்டு பேசி இருக்கிறார்.
இந்தத் தகவல் எப்படி அலிசா ஹீலிக்கு தெரியும் என சிலர் சந்தேகமடையலாம். டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் தான் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் இடம் பெற்று இருக்கிறார். அவரது மனைவிதான் அலிசா ஹீலி. மிட்செல் ஸ்டார்க் இந்த தகவலை அலிசா ஹீலியிடம் சொல்லி இருக்கலாம் என நம்பப்படுகிறது.
கே எல் ராகுலின் மனைவி ஆதியா ஷெட்டி தற்போது குழந்தையை எதிர்பார்த்துக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கே எல் ராகுல் இந்த முறை டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் ஒரு வீரராக மட்டுமே ஆட இருக்கிறார். அவர் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடவில்லை என்றாலும், அதைத் தொடர்ந்து அந்த அணியில் முக்கிய வீரராக இருப்பார். அக்சர் படேல் தலைமையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி எப்படி செயல்படும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
செய்தி சுருக்கம்: