சென்னை: நாடாளுமன்றத்தையே முடக்கியுள்ளது லலித்மோடி விவகாரம்... யார் இந்த லலித்மோடி? நாட்டை ஆளும் பிரதமர் நரேந்திர மோடி என்றால் அவரது அமைச்சரவையில் உள்ள ஒரு அமைச்சரை பதவி விலகச் சொல்லி அவையை முடக்கும் அளவிற்கு லலித் மோடி விவகாரம் புயலை கிளப்பி வருகிறது.
ஐ.பி.எல் விவகாரத்தில் சிக்கிய லலித்மோடி தலைமறைவானது முதல் தற்போது சிக்கலில் சிக்கித் தவிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் வரை எல்லாம் சென்டிமென்ட்தான் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.

ஐ.பி.எல் என்றாலே நினைவுக்கு வருவது சியர்ஸ் கேர்ஸ்தான். ஒருவர் பந்து போட மற்றொருவர் அடிக்க... அந்த பந்தை 9 பேர் தடுக்க என வெறுமனே போய்க்கொண்டிருந்த கிரிக்கெட் போட்டியை கலர் ஃபுல்லாக மாற்றிய பெருமை லலித்மோடியையே சேரும்.
2008 முதல்
2008ம் ஆண்டு ஐ.பி.எல். டி20 எனப்படும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உருவானது. ஒரு அணியில் பல நாட்டு வீரர்கள் இணைந்து ஆடிய இந்தப்போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. 8 அணிகள் இதில் பங்கேற்றன.
முதல் சாம்பியன் ராஜஸ்தான்
முதலாவது ஐ.பி.எல். போட்டியில் வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்றது. இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) நேரடி கட்டுப்பாட்டில் கடந்த 2008 ம் ஆண்டு மிகப் பிரம்மாண்டமாக இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்., ) அமைப்பு துவக்கம் கண்டது. இதன் தலைவராக லலித் மோடி நியமிக்கப்பட்டார். முதல் ஐ.பி.எல்., தொடரை (2008) வெற்றிகரமாக நடத்திக் காட்டினார் மோடி.
அதிகரித்த லலித் மோடி செல்வாக்கு
அதற்குப் பின் 2009 ம் ஆண்டு இரண்டாவது ஐ.பி.எல் தொடரை, லோக்சபா தேர்தல் காரணமாக இந்தியாவில் நடத்த முடியவில்லை. தொடரை தள்ளி வைக்குமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டது. ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த மோடி, தென் ஆப்ரிக்காவில் தொடரை சிறப்பாக நடத்திக் காட்டினார். இதன் மூலம் ஐ.பி.எல்., அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்தது. மோடியின் செல்வாக்கும் பன்மடங்கு உயர்ந்தது.
கொச்சி, புனே வந்த பிறகு
எந்த சர்ச்சைகளிலும் ஐ.பி.எல்., அமைப்பு சிக்கவில்லை. ஆனால் இந்த ஆண்டு புனே, கொச்சி என்ற இரண்டு அணிகள் புதியதாக ஐ.பி.எல்., அமைப்பில் இணைக்கப்பட்டன. இதற்கு பின்னே, பிரச்னை உருவெடுத்தது. கொச்சி அணியை ரூ. 1533 கோடிக்கு ரெண்டேவு நிறுவனம் வாங்கியது. இதில், முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் தலையிட்டு ரூ. 70 கோடி மதிப்பிலான பங்குகளை இலவசமாக, தனது நெருங்கிய தோழியான சுனந்தா புஷ்கருக்கு பெற்று தந்துள்ளார். இது பற்றி வெளியில் தெரிவிக்கக் கூடாது என சசி தரூர் தன்னை மிரட்டியதாக லலித் மோடி தெரிவித்தார். அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக சசி தரூருக்கு, கடும் நெருக்கடி ஏற்பட்டது. இதனையடுத்து சசி தரூர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதுவே மோடிக்கு வினையாகவும் அமைந்தது.
மோடியின் சரிவு
2009-ல் தென்னாப்பிரிக்காவில் நடந்த ஐ.பி.எல். போட்டிகளின்போது ஆஸ்திரேலிய முன்னணி வீரர் உட்பட 27 வீரர்கள் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்தது. ஐ.சி.சி-யின் ஊழல் தடுப்புப் பிரிவைப் பயன்படுத்தி முறைகேடுகளைத் தடுக்கும் வாய்ப்பு இருந்தும் லலித் மோடி அதைப் புறக்கணித்தது தெரியவந்தது. இப்போட்டிகளுக்கான ஒளிபரப்பு உரிமையை வழங்கியதிலும் முறைகேடு நடந்திருக்கிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸுடனான ஒப்பந்தத்தில் சுமார் ரூ. 500 கோடி முறைகேடு நடந்திருப்பதகச் சொல்லப்படுகிறது.
வாழ்நாள் தடை
ஊழல், முறைகேடு, பி.சி.சி.ஐ-க்கு அவப்பெயர் தேடித் தரும் வகையில் நடந்துகொண்டது உட்பட மோடி மீது 8 புகார்கள் தெரிவிக்கப்பட்டன. 2013 செப்டம்பர் 25-ல், அரை மணி நேரத்துக்கும் குறைவாக நடந்த சிறப்புப் பொதுக்கூட்டத்தில் பி.சி.சி.ஐ. லலித் மோடிக்கு வாழ்நாள் தடை விதித்தது.
16வழக்குகள்
லலித் மோடி மீது அமலாக்கத் துறை 16 வழக்குகளைப் பதிவுசெய்திருக்கிறது. எல்லாமே அந்நியச் செலாவணி மோசடி தொடர்பான வழக்குகள். மொத்தம் ரூ. 1,700 கோடி அபராதம் விதிக்க அமலாக்கத் துறை முடிவுசெய்திருக்கிறது.
சிக்கலில் சீனிவாசன்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையை வைத்திருந்த இந்தியா சிமென்ட்ஸ் தலைவர் என்.சீனிவாசனுக்கு சிக்கலே ஐ.பி.எல் மூலம்தான் தொடங்கியது. இந்திய கிரிக்கெட் வாரியத்தலைவர் பதவிக்கே சிக்கல் வந்தது.
சூதாட்ட புகார்
தற்போது எழுந்துள்ள சூதாட்ட புகார்களினால் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பனுக்கு ஐ.பி.எல் நடவடிக்கைகளில் பங்கேற்க வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய சிமெண்ட்ஸ் நிறுவனம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியையே கை கழுவ வேண்டிய நிலைக்கு வந்துள்ளது.
டெக்கான் சார்ஜர்ஸ்
ஐதராபாத் நகரின் டெக்கான் சார்ஜர்ஸ் அணியை வாங்கிய வெங்கடராம ரெட்டிக்கு வினையே ஐ.பி.எல்தான். இவர் 2008ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை டெக்கான் சார்ஜர்ஸ் அணியை வைத்திருந்தார். ஒப்பந்த விதிமுறைகளை மீறியதாக 2013ம் ஆண்டு டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் உரிமையை ரத்து செய்தது பிசிசிஐ.
விடாத சென்டிமென்ட்
விதி யாரை விட்டது? போலியான ஆவணங்களை சமர்பித்து வங்கிக்கடன் பெற்றதாக வெங்கடராமரெட்டியை சி.பி.ஐ கைது செய்தது. விடாது விரட்டிய ஐ.பி.எல் சென்டிமென்ட் கடைசியில் பதம் பார்த்து விட்டது.
விஜய் மல்லையா
பெங்களூரு தொழில் அதிபரான விஜய் மல்லையா, ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வாங்கிய பின்னர் சந்திக்காத சரிவுகளே இல்லை. கிங்பிஷர் ஏர்லைன்ஸ், எம்.சி.எப் உரநிறுவனம் ஆகியவற்றின் உயர்பதவிகளில் இருந்து விலக காரணமாக அமைந்துள்ளது ஐ.பி.எல் அணியை வாங்கிய பிறகுதான்.
கொச்சி டஸ்கர்ஸ் சுனந்தா புஷ்கர்
கொச்சி அணியை ரூ. 1533 கோடிக்கு ரெண்டேவு நிறுவனம் வாங்கியது. இதில், முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் தலையிட்டு ரூ. 70 கோடி மதிப்பிலான பங்குகளை இலவசமாக, தனது நெருங்கிய தோழியான சுனந்தா புஷ்கருக்கு பெற்று தந்துள்ளதாக புகார் எழவே, மத்திய அமைச்சர் பதவியை இழந்தார் சசிதரூர்.
மரணத்தில் முடிந்தது
கொச்சி டஸ்கர்ஸ் அணி மூடுவிழா கண்ட பின்னரும் விடவில்லை சென்டிமென்ட், சசிதரூரை திருமணம் செய்து கொண்ட சுனந்தாவினால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. டெல்லி ஹோட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார் சுனந்தா.
ப்ரீத்தி ஜிந்தாவின் காதல் முறிவு
இதில் கொடுமை என்னவென்றால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தாதாவின் காதல் முறிவுதான். நண்பர்களாக இருந்து காதலர்களாக மாறிய ப்ரீத்தி ஜிந்தாவும், நெஸ்வாடியாவும் இணைந்து 2008ம் ஆண்டு பஞ்சாப் அணியை வாங்கினர்.
2014ல் பிரிவு
பிசினஸ் பார்ட்னர்களாக இருந்த ப்ரீத்தி ஜிந்தாவும் நெஸ்வாடியாவும் 2014ம் ஆண்டு ஐ.பி.எல் போட்டி நடைபெற்ற போது பகிரங்கமாக சண்டை போட்டனர். இவர்களின் காதலையே காவு வாங்கியது ஐ.பி.எல் போட்டி.
புனே வாரியர்ஸ் சுபத்ரா ராய்
2012ம் ஆண்டு இந்தியாவில் அதிகாரம் மிக்க 10 நபர்கள் பட்டியலில் இருந்தவர் சகாரா நிறுவன அதிபர் சுபத்ரா ராய். இப்போதே சிறையில் காலம் தள்ளுகிறார். 2011ம் ஆண்டு புனே வாரியர்ஸ் அணியை வாங்கினார். மூன்றே ஆண்டுகளில் பிரச்சினையில் சிக்கி அணியை கைவிட்டார் ஆனாலும் விடாது கருப்பாய் விரட்டியது விதி.
ரூ. 24000 கோடி மோசடி
இவரது சகாரா நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்ட 24000 கோடி ரூபாயை முதலீட்டாளர்களுக்கு திருப்பி கொடுக்காத குற்றத்திற்காக சிறையில் தள்ளப்பட்டார். ஆனாலும் ஜாமீனில் கூட வெளிவர முடியாத நிலையில் இருக்கிறார்.
ராஜஸ்தான் ராஜ்குந்தா
இதேபோல ராஜஸ்தான் அணியை வாங்கிய ராஜ்குந்தா கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கி வாழ்நாள் தடை விதிக்கப்பட்டிருக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் போலவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் தடை செய்யப்பட்டுள்ளது.
இனி யார் யாரோ?
இதேபோல சன் தொலைக்காட்சி நிறுவனமும் சிக்கலில் சிக்க காரணம் சன் ரைசர்ஸ் அணியை வாங்கிய பின்னர்தான் என்கின்றனர் கிரிக்கெட் வல்லுநர்கள். 2013ம் ஆண்டுதான் சன் ரைசர்ஸ் பெயரில் ஹைதராபாத் அணியை வாங்கியது சன் டிவி குழுமம் அதுமுதலே சன்டிவிக்கு சிக்கல் ஆரம்பித்து விட்டது என்கின்றனர்.
பயந்து வருதுப்பா
மும்பை அணியின் உரிமையாளர் முகேஷ் அம்பானி, கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக்கான் ஆகியோர்தான் ஆனால் அடுத்து நடைபெறப்போகும் ஐ.பி.எல் ஏலத்தில் பங்கேற்கவே பயந்து கொண்டிருக்கிறார்களாம் தொழிலதிபர்கள்.