மும்பை: ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது தான் ஆரஞ்சு தொப்பி, ஒவ்வொரு சீசனிலும் பேட்டிங் திறமைக்கு ஒரு முக்கிய அடையாளமாக திகழ்கிறது. ஒரு சீசனில் அதிக ரன்களை குவித்த வீரர்களுக்கு இந்த விருது வழங்கப்படும். இருப்பினும், இந்த பெருமைமிக்க விருதை பல ஐபிஎல் ஜாம்பவான்கள் தங்கள் வாழ்நாளில் வெல்லவில்லை.
அபாரமான திறமையும், தங்கள் அணிக்கு அளப்பரிய பங்களிப்பையும் வழங்கிய பல வீரர்கள் ஒரு சீசனில் அதிக ரன் குவித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்ததில்லை. இந்தப் பட்டியலில் முதலிடத்தை பிடித்தவர் ரோஹித் ஷர்மா. ஐபிஎல் வரலாற்றின் மிக முக்கியமான நபர்களில் ரோஹித் ஷர்மா ஒருவர். மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஐந்து ஐபிஎல் கோப்பைகளை வென்றிருந்தாலும், ஆரஞ்சு தொப்பி ஒரு முறை கூட வென்றதில்லை.

7,000-க்கும் அதிகமான ரன்களைக் குவித்திருந்தாலும், ஒரு சீசனில் அதிகபட்ச ரன்களைக் குவிப்பதை விட, அணியின் வெற்றிக்காக பல சூழ்நலைகளிலும் அதிரடியை மட்டுமே காட்டி வெற்றிக்காக விளையாடியுள்ளார். 2013-ல் அவர் 538 ரன்கள் எடுத்தது அவரது சிறந்த சீசன். ஆனால் அதுவும் ஆரஞ்சு தொப்பியைப் பெற போதுமானதாக இல்லை.

ஷிகர் தவான்: பல அணிகளில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிகர் தவான், ஐபிஎல் வரலாற்றில் மிகவும் நம்பகமான தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவர். சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி கேபிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் போன்ற அணிகளுக்காக விளையாடி சுமார் 7,000 ரன்களைக் குவித்துள்ளார். 2020 மற்றும் 2021-ல் அதிக ரன் குவித்தவர்களில் ஒருவராக தொடர்ந்து இருந்தபோதும், ஒரு சீசனில் அதிகபட்ச ரன் குவித்தவராக அவர் இருந்ததில்லை.
சுரேஷ் ரெய்னா: "மிஸ்டர் ஐபிஎல்" என்று அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா, பல ஆண்டுகளாக மேலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதுகெலும்பாக இருந்தார். அதிரடியான மற்றும் நம்பகமான பேட்டிங்கிற்குப் பெயர் பெற்ற ரெய்னா, சீசன்களிலும் சீராக தனது திறமையை வெளிப்படுத்தினார், சிஎஸ்கேயின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார். 5,500-க்கும் அதிகமான ரன்களைக் குவித்த ரெய்னா, லீக்கின் முதல் நட்சத்திரங்களில் ஒருவராகத் திகழ்ந்தாலும், ஆரஞ்சு தொப்பியை ஒருபோதும் பெற்றதில்லை. 2013-ல் அவர் 548 ரன்கள் எடுத்தபோது அவருக்கு ஒரு சிறந்த வாய்ப்பு கிடைத்தது, ஆனால் அதுவும் போதியதாக இல்லை.
ஏபி டி வில்லியர்ஸ்: டி20 கிரிக்கெட்டின் மிகவும் அபாயகரமான பேட்டர்களில் ஒருவரான ஏ.பி. டி வில்லியர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக தனது அசாதாரணமான ஷாட்களால் ரசிகர்களைக் கவர்ந்தார். 5,000-க்கும் அதிகமான ரன்களைக் குவித்திருந்தாலும், 2016-ல் 687 ரன்கள் உட்பட பல சிறந்த சீசன்களைக் கொண்டிருந்தாலும், ஆரஞ்சு தொப்பியை அவர் வெல்லவில்லை. நடுவரிசையில் அவர் பேட் செய்ததால், தொடக்க ஆட்டக்காரர்களை விட அதிக பந்துகளை எதிர்கொள்ளும் வாய்ப்புகள் குறைந்தன. இது ஆட்டங்களில் அவரது மகத்தான தாக்கம் இருந்தபோதிலும், அவருக்கு விருது கிடைக்காததற்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
அஜிங்க்யா ரஹானே: ஐபிஎல் வரலாற்றில் மிகவும் நுட்ப ரீதியாகச் சிறந்த மற்றும் நம்பகமான பேட்டர்களில் அஜிங்க்யா ரஹானே ஒருவர். ராஜஸ்தான் ராயல்ஸ் போன்ற அணிகளுக்காக முக்கியப் பங்காற்றிய அவர், 5,000 ரன்களை கடந்துள்ளார். 2012-ல் அவர் 560 ரன்கள் எடுத்தது அவரது சிறப்பான சீசன். ஆயினும் ஆரஞ்சு தொப்பியை அவர் தவறவிட்டார். அவரது கிளாசிக்கல் அணுகுமுறையும், டைமிங் பார்த்து பந்தை அடிக்கும் நுட்பமும், அவரை பெரும்பாலும் இன்னிங்ஸை நிலைநிறுத்தும் பணியிலே ஈடுபட வைத்தது.
எம்.எஸ். தோனி: ஐபிஎல் வரலாற்றில் ஒரு ஜாம்பவானாக எம்.எஸ். தோனி திகழ்கிறார். தனிப்பட்ட மைல்கற்களை விட, அவரது ஆட்டத்தை முடிக்கும் திறனால் அவர் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக, அவர் பல கோப்பைகளை வென்றுள்ளார், அதே நேரத்தில் 5,000-க்கும் அதிகமான ரன்களையும் குவித்துள்ளார். இருப்பினும், ஆட்டத்தை முடிக்கும் அவரது பாத்திரம், அவரை பெரும்பாலும் பேட்டிங் வரிசையில் கீழ் வரிசையில் ஆட வைத்ததால், ஆரஞ்ச் தொப்பியை வென்றதில்லை.

ஆரஞ்சு தொப்பியை வென்ற வீரர்கள்: ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த முதல் 10 வீரர்களில் விராட் கோலி, டேவிட் வார்னர், கேஎல் ராகுல் மற்றும் கிறிஸ் கெயில் ஆகியோர் ஆரஞ்சு தொப்பியை வென்று அசத்தியுள்ளனர். இவர்கள் ஒரு சீசனில் ஆதிக்கம் செலுத்தி இந்த விருதை தங்கள் வசம் ஈர்த்தனர்.