கொல்கத்தா : இந்திய அணியின் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் ஐபிஎல் உரிமையாளர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடருடன் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. அதன்பின் பயிற்சியாளர் பொறுப்பில் தொடர ராகுல் டிராவிட் விரும்பாததால், புதிய பயிற்சியாளருக்கான தேடலில் பிசிசிஐ களமிறங்கியது. இதன்பின் பிசிசிஐ தரப்பிலும் பயிற்சியாளருக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியது.

இதில் கவுதம் கம்பீர், ஆஷிஷ் நெஹ்ரா, ரிக்கி பாண்டிங் உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. ஆனால் வெளிநாட்டு பயிற்சியாளர்களை இந்திய அணி நிர்வாகம் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கவுதம் கம்பீரை பயிற்சியாளராக கொண்டு வரும் திட்டத்தில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இருப்பதாக தகவல் வெளி வந்தது.
இதுதொடர்பாக கவுதம் கம்பீர் இதுவரை எந்த கருத்தும் வெளியிடவில்லை. இந்த நிலையில் கேகேஆர் அணியின் ஆலோசகராக பொறுப்புக்கு வந்த முதல் ஆண்டிலேயே கவுதம் கம்பீர் கோப்பையை வென்று கொடுத்துள்ளார். ஏற்கனவே 2012 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் கேகேஆர் அணி கோப்பையை வென்ற போது, பயிற்சியாளராக இருந்த ட்ரவோர் பேலிஸ்-க்கு இங்கிலாந்து பயிற்சியாளர் ஒப்பந்தம் அளிக்கப்பட்டது.
அதேபோல் கேகேஆர் அணியின் துணை பயிற்சியாளராக செயல்பட்ட மேத்யூ மாட்-க்கு இங்கிலாந்து அணியின் வெள்ளைப் பந்து பயிற்சியாளர் பொறுப்பு அளிக்கப்பட்டது. 2021ஆம் ஆண்டு வரை மேத்யூ மாட் அந்த பொறுப்பில் இருந்தார். தொடர்ந்து 2021ஆம் ஆண்டு கேகேஆர் அணியின் பயிற்சியாளராக செயல்பட்ட பிரண்டன் மெக்கல்லத்திற்கு இங்கிலாந்து அணியின் டெஸ்ட் பயிற்சியாளர் பொறுப்பு அளிக்கப்பட்டது.
இப்படி கேகேஆர் அணியில் பணியாற்றியவர்களையே தேசிய பொறுப்புக்கு அந்தந்த பயிற்சியாளர்கள் அழைக்கப்படுவது வழக்கமாகியது. தற்போது கவுதம் கம்பீரும் கேகேஆர் அணியின் ஆலோசகராக செயல்பட்டு வந்த நிலையில், தலைமை பயிற்சியாளர் பொறுப்பு வழங்கப்படுவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ஷாருக் கானுடனும் கவுதம் கம்பீர் ஆலோசித்தது தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக ஐபிஎல் அணியின் பிரபல உரிமையாளர் ஒருவர் கூறுகையில், கவுதம் கம்பீரை தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு கொண்டு வரும் முடிவு ஏற்கனவே எடுக்கப்பட்டுவிட்டது. இதுதொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் பயிற்சியாளர் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து கவுதம் கம்பீர் பிசிசிஐ-க்கு அனுப்பிவிட்டதாகவும் கூறப்படுகிறது.