டெல்லி: ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரில் புனேயில் நடைபெறுவதாக இருந்த இரண்டு பிளே ஆப் ஆட்டங்கள் கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்டுள்ளன.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் பரபரப்பாக நடந்து வருகிறது. மொத்தம் 60 ஆட்டங்கள் கொண்ட இந்த சீசனில் 8 அணிகள் விளையாடுகின்றன. இதுவரை 33 ஆட்டங்கள் முடிந்துள்ளன.
தற்போதைய நிலையில் ஹைதராபாத் முதலிடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் 2வது இடத்திலும் உள்ளன. கொல்கத்தா, பஞ்சாப் முறையே 3 மற்றும் 4வது இடத்தில் உள்ளன.
இந்த சீசனின் 57வது ஆட்டமான தகுதிச் சுற்று 1 ஆட்டம் மும்பையில் மே 22ல் நடக்கிறது. எலிமினேட்டர் சுற்று ஆட்டம் மே 23ல் புனேயிலும், 59வது ஆட்டமான தகுதிச் சுற்று 2 ஆட்டம் புனேயில் மே 25லும், பைனல்ஸ் மே 27ல் மும்பையில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சொந்த மைதானமாக புனே தற்போது மாறியுள்ளது. அங்கு மே 22ல் தனது கடைசி லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பஞ்சாப் அணியும் மோத உள்ளன.
அதனால் மைதானத்தை தயார் செய்ய போதிய அவகாசம் இல்லாததால், புனேயில் நடைபெறுவதாக இருந்த எலிமினேட்டர் மற்றும் தகுதி சுற்று 2வது ஆட்டம் கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் மும்பையில் நடைபெறும் தகுது சுற்று முதல் ஆட்டம் மற்றும் பைனல்ஸ் ஆகியவற்றில் எந்த மாற்றமும் இல்லை.