டெல்லி : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் லக்னோ அணியும் நாளைய ஆட்டத்தில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய இக்கட்டான நிலையில் இருக்கிறார்கள்.தற்போது இருவரும் தலா 15 புள்ளிகளுடன் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்கள்.
தற்போது நாளைய ஆட்டத்தில் அவர்கள் வென்றால் 17 புள்ளிகளை பெற்று பிளே ஆப் சுற்றுக்கு சென்று விடுவார்கள். ஒருவேளை நாளைய ஆட்டம் ரத்தானால் அவர்களுடைய பிளே ஆப் வாய்ப்பு எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதை பார்க்கலாம்.

ஏனென்றால் தற்போது வட இந்தியாவில் வெயில் கொளுத்தி எடுப்பதால் மாலை நேரத்தில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது. கொல்கத்தாவில் தற்போது மழை பெய்து வருகிறது. இதனால் லக்னோ கே கே ஆர் அணிகள் மோதும் ஆட்டம் மழையால் பாதிக்கப்படலாம். இதே போன்று சிஎஸ்கே டெல்லி ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும் என்பதையும் தற்போது பார்க்கலாம்.
சிஎஸ்கே, டெல்லி அணிகள் மோதும் ஆட்டம் மழையால் ரத்தானால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி கிடைக்கும். மேலும் ரன் ரேட்டில் எந்த மாற்றமும் இருக்காது. இது சிஎஸ்கே அணிக்கு சாதகமான சூழலாக தான் கருதப்படும். ஏனென்றால் தற்போது மும்பையும் பெங்களூர் அணியும் மட்டும்தான் 16 புள்ளிகள் பெற்று சிஎஸ்கே வின் இடத்திற்கு ஆபத்தை கொடுக்க முடியும். ஆனால் அந்த 2 அணிகளும் சிஎஸ்கே வை விட குறைந்த ரன் ரேட்டில் தான் இருக்கிறது.

இதேபோன்று லக்னோ அணியும் சிஎஸ்கேவை விட குறைந்த ரன் ரேட்டில் தான் இருக்கிறது. ஒருவேளை அவர்களுடைய ஆட்டமும் ரத்தாகி ,லக்னோ 16 புள்ளிகளை பெற்றாலும் சிஎஸ்கேவுக்கு எந்த ஆபத்தும் இருக்காது. ஒருவேளை ஆர்சிபி அணி மிகப்பெரிய வெற்றியை பெற்றால் , அந்த அணி அதிகபட்சமாக இரண்டாவது இடத்திற்கு முன்னேற முடியும்.
இந்த நிலையில் லக்னோவை விட சிஎஸ்கே ரன் ரேட்டில் அதிகம் இருப்பதால் மூன்றாவது இடம் கிடைத்துவிடும். இதனை அடுத்து நான்காவது இடத்தில் லக்னோவுக்கும் மும்பைக்கும் போட்டி நடக்கும். இதில் லக்னோ ரன் ரேட் அதிகமாக இருப்பதால், அவர்கள் பிளே ஆப்க்கு சென்றுவிடுவார்கள். இதனால் நாளைய ஆட்டம் ரத்தனால் கூட சிஎஸ்கேவுக்கு சாதகமான சூழல் தான் ஏற்பட்டிருக்கிறது.