மொஹாலி: குமார சங்கக்காராவின் அபாரமான ஆட்டத்தால், மும்பை இந்தியன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.
பேட்டிங் மற்றும் கீப்பிங்கில் சங்கக்காரா ஜொலித்தது, வேகப் பந்து வீச்சு மற்றும் சுழற்பந்து வீச்சு மூலம் மும்பையை ரன் எடுக்க விடாமல் செய்தது ஆகியவை காரணமாக கிங்ஸ் லெவன் அணிக்கு வெற்றி கிடைத்தது.
முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 154 ரன்களை எடுத்தது. தவன் 2 ரன்களில் வீழ, ச்ச்சின் 29 ரன்களை எடுத்து வெளியேறினார். இவரை பியூஷ் சாவ்லாவின் பந்து பதம் பார்த்து அனுப்பியது.
அடுத்து அம்பட்டி ராயுடுவையும் பியூஷ் சாவ்லா வீழ்த்தினார். ராயுடுவின் பங்கு 33 ரன்கள். அதுவும் 18 பந்துகளில் இதைக் குவித்திருந்தார் ராயுடு.
செளரப் திவாரி ரன் குவிக்க தயாராகியபோது அவரையும் சாவ்லா அவுட் ஆக்கி அனுப்பி வைத்தார்.
இருப்பினும் டுமினி சற்று சிறப்பாக ஆடி 35 ரன்களைக் குவித்தார். அதேபோல சதீஷும் 17 பந்துகளில் 20 ரன்களை எடுத்தார்.
பஞ்சாப் அணியின் வேகப் பந்து வீச்சும், சுழற்பந்து வீச்சும் அபாரமாக இருந்த்தால், மும்பை அணி ரன் குவிக்க முடியாமல் தடுமாறியது. பியூஷ் சாவ்லா 3 விக்கெட்களையும், இர்பான் பதான் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
கேப்டன் சங்கக்காரா கீப்பிங்கில் ஜொலித்தார். 2 கேட்ச் ஒரு ஸ்டம்பிங் செய்து 3 பேரை காலி செய்ய உதவினார்.
பின்னர் பேட்டிங்கைத் தொடங்கிய பஞ்சாப் அணிக்கு பரத்தும், ஜெயவர்த்தனேவும் நல்ல தொடக்கத்தைக் கொடுத்தனர். ஜெயவர்த்தனே அதிரடியாக ஆடி 18 பந்துகளில் 31 ரன்களைக் குவித்தார். பரத்தின் பங்கு 27 பந்துகளில் 33 ரன்கள்.
இருப்பினும் சங்கக்காராவின் அதரடி பேட்டிங் அட்டகாசமாக அமைந்த்து. 56 ரன்களைக் குவித்த அவரை லசித் மலிங்கா அவுட் ஆக்கி அனுபி வைத்தார்.
இர்பான் பதான் 6 பந்துகளைச் சந்தித்து 15 ரன்களைக் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
19.2 ஓவர்களில் 4 விக்கெட்களை மட்டும் இழந்து 158 ரன்களுடன் வெற்றி பெற்றது பஞ்சாப்.
11 போட்டிகளில் ஆடியுள்ள கிங்ஸ் லெவன் அணிக்கு இது 3வது வெற்றியாகும்.
அதேசமயம், 10 போட்டிகளில் ஆடியுள்ள மும்பைக்கு இது 3வது தோல்வியாகும்.
புள்ளிகள் பட்டியலில் மும்பை முதலிடத்திலும், கிங்ஸ் லெவன் கடைசி இடத்திலும் உள்ளன. அரை இறுதிக்கான வாய்ப்பை ஏற்கனவே பஞ்சாப் அணி இழந்து விட்டது குறிப்பிடத்தக்கது.