சென்னை: தொடர்ந்து நான்கு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியவில்லை என்றால் நீங்கள் எல்லாம் எதற்கு விளையாடுகிறீர்கள் என்று ரவி சாஸ்திரி தீபக் சாஹர் குறித்து கடும் விமர்சனத்தை வைத்திருக்கிறார். ஐபிஎல் ஏலத்தில் தீபக் சாஹரை 14 கோடி ரூபாய் கொடுத்து சி எஸ் கே வாங்கியது.
அதன் பிறகு தொடர்ந்து காயங்களால் தீபக் சாஹர் அவதிப்பட்டு வருகிறார். கடந்த சீசனில் ஒரு போட்டியில் கூட விளையாடாத தீபக் சாஹர் டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பு மீண்டும் காயமடைந்தார். இதனை தொடர்ந்து டிசம்பர் மாதம் வங்கதேச தொடரில் சேர்க்கப்பட்ட தீபக் சாஹர் மூன்று ஓவர் மட்டுமே வீசிவிட்டு போட்டியில் இருந்து விலகினார்.

அதன் பிறகு ஐபிஎல் போட்டியில் தான் தீபக் சாஹர் விளையாடினார். ஆனால் இப்போதும் மூன்றாவது போட்டியில் மீண்டும் காயம் ஏற்பட்டு விலகி விட்டார். இது குறித்து பேசி உள்ள ரவி சாஸ்திரி, காயம் அடைந்த வீரர்கள் உடல் தகுதியைப் பெற தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி செய்வார்கள். ஆனால் தீபக் சாஹர் போன்ற வீரர்கள் எல்லாம் அங்கே தங்கிக் கொள்வது நல்லது.
ஏனென்றால் அவர்களால் தொடர்ந்து நான்கு போட்டிகளில் கூட விளையாட முடியவில்லை.அதுவும் ஐபிஎல் போட்டிகள் எல்லாம் நான்கு ஓவர்கள் தான் வீச வேண்டும். அது கூட முடியவில்லை என்றால் என்னால் நம்பவே முடியவில்லை. கிரிக்கெட்டு அதிகமாக விளையாடாமல் மீண்டும் மீண்டும் காயம் அடைகிறீர்கள் என்றால் நீங்கள் எதற்கு திரும்பி கிரிக்கெட் விளையாட வருகிறீர்கள்.

இது உங்களுக்கு மட்டுமல்ல அணியில் உள்ள சக வீரர்கள், கேப்டன்கள், அணி நிர்வாகம் அனைவருக்குமே இது தலைவலியை கொடுக்கும். முழு உடல் தகுதியைப் பெற்று தொடர்ந்து விளையாட முடியும் என்றால் மீண்டும் வாருங்கள். என்னை பொறுத்தவரை சிஎஸ்கே அணி தீபக் சாஹரை விட்டுவிட்டு புதிய வீரரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ரவி சாஸ்திரி காட்டமாக விமர்சித்துள்ளார். தீபக் சாஹர் நடப்பு ஐபிஎல் தொடரில் ஒரு மாதம் வரை விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.