ஹைதராபாத்: ஐபிஎல் டி20 10-வது சீசனின் முதல் போட்டியில் பெங்களூரு அணியை 35 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.
10வது ஐபிஎல்லின் முதல் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

இதைத்தொடர்ந்து பேட்டிங்கை தொடங்கிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்களாக அந்த அணியின் டேவிட் வார்னரும், ஷிகர் தவனும் களமிறங்கினர். சிறிது நேரம் அதிரடி காட்டிய வார்னர் 14 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் ஷிகார் தவானுடன் ஜோடி சேர்ந்த ஹென்ரிகியூஸ் சீராக ரன் குவிப்பில் ஈடுபட்டார். ஒருபுறம் ஷிகார் அதிரடியாக பவுண்டரிகளை விளாசி தள்ளினார். இருப்பினும் 40(31) ரன்கள் எடுத்திருந்த போது தவான் கேட்சாகி அவுட்டானார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய யுவராஜ் சிங் அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசினார். 27 பந்துகளில் 62 ரன்கள் குவித்து வெளியேறினார். ஹென்ரிகியூஸ் 52(37) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது.
208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற ஹிமாலய இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அதிரடியாக ஆடியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கெயில் தன் பங்கிற்கு 21 பந்துகளில் 32 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். மந்தீப் சிங் மற்றும் ஹெட் ஆகியோர் சிறப்பாக ஆட்டத்தை தந்தபோதிலும் அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
அந்த அணி 19.4 ஓவர்களில் 172 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து முதல் தோல்வியை சந்தித்தது. இதனால் 35 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றது. ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக நெஹ்ரா, புவனேஷ்வர் குமார்,ரஷீத் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.