“நட்சத்திர வீரர்களுக்கே டாட்டா தான்” மும்பை அணி எடுத்த அதிரடி முடிவு.. தக்கவைக்கப்படும் வீரர்கள் இதோ
சென்னை: மும்பை இந்தியன்ஸ் அணியில் எந்தெந்த வீரர்கள் தக்கவைப்படுவார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடரில் 5 முறை கோப்பையை வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியானது கடந்த சீசனில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு கூட முன்னேறாமல் வெளியேறியது.
அணியின் முக்கிய வீரர்களான சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹார்திக் பாண்டியா, என அனைவருமே சரியாக விளையாடாத காரணத்தால் தோல்விகளை சந்தித்தது.

பதிலடி கொடுக்க தீவிரம்
கடந்த சீசனில் எதிர்கொண்ட விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அடுத்தாண்டு கம்பேக் கொடுக்க வேண்டும். எனவே மெகா ஏலத்தின் போது அதிரடி முடிவுகளை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டுமுதல் புதிதாக அகமதாபாத், லக்னோ அணிகள் இணைக்கப்பட்டு, மொத்தம் 10 அணிகள்வரை ஐபிஎலில் பங்கேற்கவுள்ளதால் போட்டிகள் கடுமையாக இருக்கும் எனத்தெரிகிறது.

மும்பை அணி தேர்வு
இந்த மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணியும் 4 வீரர்களை தக்கவைத்துக்கொள்ளலாம். அதாவது 3 உள்நாட்டு வீரர்கள் மற்றும் ஒரு வெளிநாட்டு வீரர் அல்லது 2 அயல்நாட்டு வீரர்கள் மற்றும் 2 உள்நாட்டு வீரர்களை தக்கவைத்துக்கொள்ளலாம். அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி யார் யாரை எத்தனை கோடிக்கு தக்க வைக்கப்போகிறது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கேப்டன் ரோகித் சர்மா, தவிர்க்க முடியாத வீரராக முதல் தேர்வாக உள்ளார். அவருக்கு ரூ.16 கோடி ஊதியம் வழங்கவுள்ளது.

மற்றவர்கள்
2வது வீரராக வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை மும்பை அணி தக்கவைக்கவுள்ளது. அவருக்கு ஊதியமாக ரூ.12 கோடி நிர்ணயிக்கப்படவுள்ளது. மும்பை அணியின் தூணாக விளங்கும் கெயீரன் பொல்லார்ட் 3வது வீரராகவும், இளம் வீரர் இஷான் கிஷான் 4வது வீரராகவும் தக்கவைக்கப்படவுள்ளனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கழட்டிவிடப்பட்ட வீரர்கள்
கடந்த 2 ஆண்டுகளாக மோசமான ஃபார்மில் உள்ள ஹர்திக் பாண்ட்யாவும் அவரது சகோதரர் க்ருணால் பாண்ட்யாவும் கழட்டிவிடப்படவுள்ளனர். இதே போல முன்னணி பவுலர் ட்ரெண்ட் போல்ட் ஆகியோரும் கழட்டிவிடப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இவர்களை பெரிய தொகைக்கு ஏலம் எடுக்க புதிதாக வரும் 2 அணிகளும் போட்டி போடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications