டெல்லி: டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ஆஸ்திரேலியா ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் நீக்கப்பட்டுள்ளார். 7 ஆண்டுகளாக டெல்லி அணியுடன் இணைந்து பணியாற்றி வரும் ரிக்கி பாண்டிங், எதிர்பார்த்த அளவிற்கு செயல்படாததால், டெல்லி அணி நிர்வாகம் இந்த முடிவுக்கு வந்துள்ளது.
ஐபிஎல் தொடரில் இதுவரை கோப்பை வெல்லாத அணிகள் என்றால் ஆர்சிபி, பஞ்சாப், டெல்லி, லக்னோ அணிகள் தான். இதில் லக்னோ அணி அறிமுகம் செய்யப்பட்டு இதுவரை 3 சீசன்களில் மட்டுமே விளையாடி இருக்கிறது. ஆனால் மற்ற 3 அணிகளும் 17 சீசன்களாக ஒருமுறை கூட சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியாமல் திணறி வருகின்றன.

அதிலும் டெல்லி அணி கோப்பையை வெல்ல ஏராளமான முயற்சிகள் செய்த போதும், இதுவரை கைகூடவில்லை. கடந்த சீசனில் கூட டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் நிறைவு செய்தது. இதன் காரணமாக ரசிகர்கள், விமர்சகர்கள் பலரும் தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கின் செயல்பாடுகளை கேள்வி எழுப்ப தொடங்கினர்.
இந்த நிலையில் டெல்லி அணி நிர்வாகம் தரப்பில் ரிக்கி பாண்டிங்கின் செயல்பாடுகள் மீதான ஆலோசனை கூட்டம் நடந்துள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தின் போது டெல்லி அணியின் இயக்குநர் சவுரவ் கங்குலி தான் பாண்டிங்கை நீக்குவது தொடர்பாக பேசியது தெரிய வந்துள்ளது. ரிக்கி பாண்டிங்கை விடவும் இந்திய பயிற்சியாளர்களை வைக்கலாம் என்று கூறியுள்ளார்.
2015ஆம் ஆண்டு மும்பை அணியின் பயிற்சியாளராக இருந்து அந்த அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார் ரிக்கி பாண்டிங். அதன்பின் டெல்லி அணிக்கு வந்த அவர், 2020ஆம் ஆண்டு இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்றார். அப்போதும் மும்பை அணியிடம் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்தது. 7 ஆண்டுகளாக கோப்பையை வெல்ல முடியாததால், ரிக்கி பாண்டிங்கை நீக்கும் முடிவிற்கு டெல்லி அணி வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து டெல்லி அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பு சவுரவ் கங்குலிக்கு அளிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதனால் அடுத்த சீசனில் டெல்லி அணியின் பயிற்சியாளராக கங்குலி களமிறங்கவுள்ளார். அடுத்த ஆண்டு ஐபிஎல் சீசனுக்கு முன் மெகா ஏலம் நடக்கவுள்ள நிலையில், சவுரவ் கங்குலியிடம் அணியை கட்டமைக்கும் பொறுப்பை கொடுப்பது சிறந்த முடிவாக பார்க்கப்படுகிறது.