மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனுக்கான அட்டவணையை பிசிசிஐ நேற்று அறிவித்தது. இதில் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கும் இந்த தொடர் மே 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதி போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
65 நாட்கள் நடைபெறும் இந்த தொடரில் மொத்தமாக 74 போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் 12 நாட்கள் மட்டும் இரண்டு போட்டிகள் நடைபெறும். இந்த சூழலில் ஐபிஎல் அட்டவணை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பாதகமாகவும், சிஎஸ்கேவுக்கு சாதகமாகவும் தயாரிக்கப்பட்டிருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா குற்றம்சாட்டி இருக்கிறார்.

இது குறித்து வீடியோ ஒன்றில் பேசிய ஆகாஷ் சோப்ரா, மும்பை இந்தியன்ஸ் அணி தங்களுடைய முதல் போட்டியை வெளியூரில் தான் முதலில் விளையாடுகிறது. அது மட்டுமில்லாமல் ஒரு போட்டி சொந்த ஊரிலும், அடுத்த போட்டி வெளியூரிலும் என்ற வகையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கான அட்டவணை தயாரிக்கப்பட்டிருக்கிறது.
இதை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. இந்த தொடர் முழுவதும் மும்பை அணி உள்ளூரிலும், வெளியூரிலும் மாற்றி மாற்றி விளையாடுகிறது. இந்த ஒட்டுமொட்டு தொடரிலும் மும்பை அணி தொடர்ந்து சொந்த மண்ணில் ஒரே ஒரு முறை தான் இரண்டு போட்டிகளில் விளையாடுகிறது. இது நிச்சயம் மும்பை அணியின் செயல்பாட்டில் சிக்கலை ஏற்படுத்தும்.
உடலளவில் மும்பை அணி வீரர்கள் பாதிக்கப்படுவார்கள். இது நிச்சயமாக கடினமான அட்டவணை தான். மும்பை அணியின் கண்ணோட்டத்தில் இருந்து பார்த்தால் நிச்சயம் அவர்கள் பயணம் செய்ய கஷ்டப்படுவார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் அது மும்பை அணியின் செயல்பாட்டையும் பாதிக்கும்.
அதே சமயம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அட்டவணையை பார்த்தால் முதல் ஆறு போட்டிகளில் நான்கு போட்டிகள் அவர்கள் சொந்த மண்ணில் தான் நடைபெறுகிறது. இது நிச்சயம் சிஎஸ்கேவுக்கு சாதகமான அட்டவணையாகும். ஏனென்றால் சொந்த மண்ணில் சென்னை அணி வீழ்த்த முடியாத அணியாக இருக்கிறது. முதல் ஆறு போட்டிகளில் மூன்று நான்கு போட்டிகளில் சிஎஸ்கே வெற்றி பெற்றால் அவர்கள் 8 முதல் 10 புள்ளிகளை பெற்று விடுவார்கள்.
இதன் மூலம் பிளே ஆப் சுற்றுக்கு செல்வது என்பது மிகவும் ஈசியாகிவிடும். அதன் பிறகு தொடரின் இரண்டாவது பகுதியில் அவர்கள் அதிகம் வெளியூருக்கு செல்வார்கள். அங்கே பனிப்பொழிவு ஒரு பிரச்சனையாக இருக்காது. எனவே இது சிஎஸ்கேவுக்கு சாதகமான அட்டவணை தான் என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணி சிஎஸ்கே அணியை 23ஆம் தேதியும், 28ஆம் தேதி ஆர் சி பி ஐ சென்னை அணி தங்களது சொந்த மண்ணில் எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.