இன்று ஹைதராபாத்துடன் அரை இறுதியில் மோதல் – இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுமா சென்னை

இன்று 3வது ஐபிஎல் தொடரின் 2வது அரை இறுதிப் போட்டி மும்பை டிஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் லீக் சுற்றில் 2வது இடத்தைப் பிடித்த ஹைதராபாத் அணியும் 3வது இடத்தைப் பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸும் மோதுகின்றன.
இரு அணிகளும் கிட்டத்தட்ட சம பலம் வாய்ந்தவைதான். இருப்பினும் லீக் சுற்றில் ஹைதராபாத் அணி 8 போட்டிகளிலும், சென்னை அணி 7 போட்டிகளிலும் வென்றுள்ளன.
சென்னை அணி ஆரம்பத்தில் சொதப்பியது. பின்னர் பிக்கப் ஆகி இப்போது அரை இறுதி வரை வந்துள்ளது. கடந்த இரண்டு ஐபிஎல் தொடர்களிலம் அரை இறுதியைத் தொட்ட அணி சென்னை. மூன்று தொடர்களிலும் அரை இறுதி வரை வந்த ஒரே அணி என்ற பெருமையும் சென்னைக்கு உண்டு.
ஹைதராபாத் அணியோ நடப்புச் சாம்பியனாக உள்ளது. எனவே அதைத் தக்க வைத்துக் கொள்ள கடுமையாக போராடி வருகிறது.
லீக் சுற்றில் இரண்டு முறையும் சென்னையைத் தோற்கடித்துள்ளது ஹைதராபாத். எனவே அரை இறுதியிலும் காலி செய்து விடலாம் என்ற நம்பிக்கையுடன் உள்ளது ஹைதராபாத்.
ஆனால் லீக் சுற்றில் பட்ட தோல்விகளுக்கு இன்று பழி வாங்கி விடுவது என்ற வேகத்தில் உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்.
சென்னை அணியைப் பொறுத்தவரை முரளி விஜய், சுரேஷ் ரெய்னா, பத்ரிநாத் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். முரளி, ரெய்னா இருவரும் ரன் மழை பொழிந்தவண்ணம் உள்ளனர். பத்ரிநாத் இக்கட்டான நேரத்தில் அருமையாக கை கொடுக்கிறார். கூடவே டோணியும் இப்போது பார்முக்குத் திரும்பி விட்டார்.
மாத்யூ ஹெய்டன் மட்டும் ஊசலாட்டத்தில் இருக்கிறார். அவரும் நின்று விட்டால், சென்னை அணி, எதிரணியை பிரித்து மேய்வது உறுதி.
பந்து வீச்சை பொறுத்தமட்டில், சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் அபாரமாக செயல்படுகிறார். இவருக்கு மிகப் பிரகாசமான எதிர்காலம் உள்ளதாக இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்கள் பாராட்டுரை வாசித்து வருகின்றனர்.
அதேபோல முத்தையா முரளிதரன், போலிங்கர் ஆகியோரும் சிறப்பான பார்மில் உள்ளனர். இவர்கள் தவிர ஆல் ரவுண்டர் அல்பி மார்க்கலும் கை கொடுக்கத் தவறியதில்லை.
ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது சென்னை அணி பிரமாதமாகத்தான் இருக்கிறது.
அதேசமயம, ஹைதராபாத் அணியும் சற்றும் சளைக்காத பார்முடன் உள்ளது. கில்கிறைஸ்ட், சுமன், சைமண்ட்ஸ் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். ஹர்மீத் சிங், ஆர்.பி.சிங் ஆகியோரின் பந்து வீச்சும் நன்றாகவே உள்ளது. சுமந்த் நெருக்கடியான நேரங்களில் கை கொடுக்கிறார்.
நடப்புச் சாம்பியன் என்பதால் அந்தப் பெருமையைத் தக்க வைத்துக் கொள்ள டெக்கான் கடுமையான போட்டியைக் கொடுக்கும்.
மேட்ச் பிக்ஸிங் எதுவும் நடக்காமல் இருந்தால் விறுவிறுப்பான போட்டியைக் காணும் வாய்ப்பு ரசிகர்களுக்குக் கிடைக்கும்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:37 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications