ஐபிஎல் மேட்ச் அதிக நேரம் நடந்தால் அம்பயருக்கு தான் தண்டனை கொடுக்கணும்.. MCC தலைவர் அதிரடி ஆலோசனை
மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி நீண்ட நேரம் நடைபெறுவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 2026 ஐபிஎல் தொடரில் இதுவரை ஆறு போட்டிகளில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட போட்டிகள் அதிக நேரம் நடந்துள்ளன. அதற்காக ஐபிஎல் விதிப்படி கேப்டன்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், இதற்கு தீர்வு காண, வீரர்களுக்குப் பதிலாக அம்பயர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என மெரில்போன் கிரிக்கெட் கிளப்பின் கிரிக்கெட் பிரிவுத் தலைவர் பிரேசர் ஸ்டீவர்ட் பிசிசிஐ-க்கு அதிரடி ஆலோசனையை வழங்கியுள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் 2026 தொடரில் பல போட்டிகள் நள்ளிரவு வரை நீடிக்கின்றன. சமீபத்தில் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையிலான போட்டியை நேரில் பார்த்த பிரேசர் ஸ்டீவர்ட், அந்த ஆட்டம் 4 மணி நேரம் 22 நிமிடங்கள் நீடித்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். ஒரு டி20 போட்டி இவ்வளவு நேரம் நடைபெறுவது விளையாட்டின் சுவாரஸ்யத்தைக் குறைப்பதாக அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

ஏன் அம்பயர்கள் மீது நடவடிக்கை?
தற்போதைய விதிகளின்படி, குறிப்பிட்ட நேரத்திற்குள் ஓவர்களை வீசி முடிக்கவில்லை என்றால் (ஓவர் ரேட்), அந்த அணியின் கேப்டனுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. கடந்த போட்டியில் கூட கொல்கத்தா கேப்டன் ரகானேவுக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால், ஆட்டத்தை விரைவாக நடத்துவது மைதானத்தில் இருக்கும் அம்பயர்களின் பொறுப்பு என்று ஸ்டீவர்ட் கூறுகிறார்.
"அம்பயர்கள் ஆட்டத்தை மெதுவாக நடக்க அனுமதிக்கிறார்கள். நீண்ட இடைவேளைகளைத் தடுத்து, ஆட்டத்தை விரைவுபடுத்த அவர்களுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், ஒவ்வொரு இடைவேளையும் கோடிக்கணக்கான மக்கள் பார்க்கும் விளம்பர வாய்ப்பாகப் பார்க்கப்படுவதால், அம்பயர்கள் இதில் மெத்தனமாக இருக்கிறார்கள். அம்பயர்களுக்கு அபராதம் விதித்தால் மட்டுமே அவர்கள் நேரத்தைக் கடைபிடிப்பதில் அதிக அக்கறை காட்டுவார்கள்" என அவர் தெரிவித்துள்ளார்.
60 விநாடி விதி
இங்கிலாந்தில் நடைபெறும் 'தி ஹண்ட்ரட்' கிரிக்கெட் போட்டிகளை உதாரணமாகக் காட்டிய அவர், "அங்கு ஒரு விக்கெட் விழுந்தால் அடுத்த 60 விநாடிகளுக்குள் புதிய பேட்டர் தயாராக இருக்க வேண்டும். தவறினால் 5 ரன்கள் அபராதமாக எதிரணிக்கு வழங்கப்படும். அத்தகைய கண்டிப்பான முறையை ஐபிஎல் தொடரிலும் கொண்டு வர வேண்டும். இந்தியாவில் வெயில் அதிகம் இருப்பதால் வீரர்கள் தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம் தான், ஆனால் மைதானத்திற்குள் அடிக்கடி ஊழியர்கள் ஓடி வருவது நேரத்தை வீணடிக்கிறது" என்றார்.
கிரிக்கெட் விதிகளின்படி அம்பயர்களுக்கு எச்சரிக்கை விடுக்கவும், 5 ரன்கள் அபராதம் விதிக்கவும் அதிகாரம் இருந்தும், அவர்கள் அதைச் செயல்படுத்த தயங்குகிறார்கள் என்பது ஸ்டீவர்ட்டின் வாதம். கேப்டன்களுக்கு அபராதம் விதிப்பதற்குப் பதிலாக, நேரத்தைக் கண்காணிக்கும் அம்பயர்களைப் பொறுப்பாக்கினால் ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக அமையும் என அவர் பிசிசிஐ-க்கு கோரிக்கை விடுத்துள்ளார். இந்த அதிரடி மாற்றத்தை பிசிசிஐ ஏற்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications