சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டி சூதாட்டப் புகாரில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளின் முன்னாள் நிர்வாகிகளான குருநாத் மெய்யப்பன் மற்றும் ராஜ்குந்த்ரா ஆகியோருக்கு, கிரிக்கெட் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட ஆயுட்கால தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது உச்சநீதிமன்றம் அமைத்த முன்னாள் நீதிபதி லோதா தலைமையிலான குழு.
கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மேட்ச் பிக்சிங், சூதாட்டம் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஸ்ரீசாந்த், அங்கித் சவான் மற்றும் அஜித் சன்டிலா ஆகியோர் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சென்னை அணியின் நிர்வாகி குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளர் ராஜ் குந்த்ரா ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இதையடுத்து, ஐ.பி.எல் முறைக்கேடு குறித்து விசாரிக்க 'முகுல் முத்கல்' கமிட்டியை உச்ச நீதிமன்றம் அமைத்தது.
முகுல் கமிட்டி அளித்த அறிக்கையின்படி, வழக்கை மேற்கொண்ட உச்ச நீதிமன்றம், ஐபிஎல் சூதாட்டம் தொடர்பான பி.சி.சி.ஐயின் விசாரணைகளும் நடவடிக்கைகளும் சட்டத்துக்கு உட்பட்டதுதான் என்று கூறியதுடன், குருநாத் மெய்யப்பன், ராஜ் குந்த்ரா ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தீர்ப்பளித்தது.
சூதாட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்து, குருநாத் மெய்யப்பன், ராஜ் குந்த்ரா ஆகியோருக்கு என்ன தண்டனை வழங்கலாம் என்பதையும், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய ஐ.பி.எல். அணிகளின் எதிர்காலத்தை நிர்ணயிப்பது தொடர்பாகவும் முடிவெடுக்க உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் ஒரு குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது.
லோதா தலைமையிலான விசாரணைக் குழு தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் சூதாட்டப் புகாரில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீதான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது. குருநாத் மெய்யப்பன் மற்றும், ராஜ்குந்த்ராவுக்கு சூதாட்டத்தில் தொடர்புள்ளது தெரியவந்துள்ளதால், ஐசிசியின் பல்வேறு விதிமுறைகளின் கீழ், இருவருமே எந்த வகையான கிரிக்கெட் நடவடிக்கைகளிலும் ஈடுபட ஆயுட் தடை விதிக்கப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்களிடம் லோதா இதை தெரிவித்தார்.