கொரோனா பாதிப்பு
ஐபிஎல் 2021 தொடரின் நேற்றைய போட்டி கேகேஆர் மற்றும் ஆர்சிபி இடையில் நடைபெறவிருந்த நிலையில் கேகேஆர் வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து அந்த போட்டி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதேபோல சிஎஸ்கே அணியிலும் இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
குவாரன்டைனில் வீரர்கள்
இதையடுத்து நாளைய சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் இடையிலான போட்டியும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கேகேஆர் மற்றும் சிஎஸ்கே அணிகள் கடுமையான குவாரன்டைனில் 5 நாட்கள் ஈடுபடும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் அவர்களுக்கு தொடர்ந்து கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிகிறது.
திட்டமிட்டபடி நடக்கும்
இந்நிலையில் இன்றைய போட்டி எஸ்ஆர்எச் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெறவிருந்தது. எஸ்ஆர்எச் விக்கெட் கீப்பர் விரித்திமான் சாஹாவிற்கும் கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து இன்றைய போட்டியும் தள்ளி வைக்கப்பட்டது.
தற்காலிகமாக தள்ளிவைப்பு
இதனிடையே, அடுத்தடுத்த ஐபிஎல் வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து ஐபிஎல் போட்டிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. இதை பிசிசிஐ துணை தலைவர் ராஜிவ் சுக்லா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
தேதிகள் அறிவிக்கப்படாமல் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் போட்டிகள் எப்போது நடக்கும் எங்கே நடக்கும் என்பது குறித்த எந்த அறிவிப்பும் வெளியிடப்பட வில்லை. கடந்த ஒரு மாதத்தில் மக்களுக்கு சிறப்பான கொண்டாட்டங்களை அளித்துவந்த ஐபிஎல் போட்டிகள், தள்ளிவைக்கப்பட்டுள்ளது ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது. மீண்டும் எப்போது நடக்கும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பெரும்பாலும் ஒரு வாரம் போட்டிகள் நிறுத்தப்படலாம். மும்பைக்கு போட்டிகள் மாற்றப்பட்ட பின் போட்டிகள் நடக்கலாம் என்று தகவல்கள் வருகின்றன.