மும்பை: 2026 ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் தக்கவைப்புக்கான காலக்கெடு (நவம்பர் 15) நெருங்கி வரும் நிலையில், அனைத்து அணிகளும் தங்களது இறுதிப் பட்டியலைத் தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. ஜடேஜா - சஞ்சு சாம்சன் இடையேயான மெகா பரிமாற்றம் குறித்த செய்திகள் கிரிக்கெட் வட்டாரத்தை ஆக்கிரமித்துள்ள நிலையில், தற்போது மும்பை இந்தியன்ஸ் (MI) முகாமில் இருந்து ஒரு முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது.
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன் டெண்டுல்கரை, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணிக்கு விற்க மும்பை இந்தியன்ஸ் அணி பேச்சுவார்த்தை நடத்தி முடித்து விட்டதாகவும், விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக கிடைத்த தகவலின்படி, மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் அர்ஜுன் டெண்டுல்கர் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகிய இரு வீரர்களின் பரிமாற்றம் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தின. இது நேரடி வீரர்கள் பரிமாற்றமாக இல்லாமல், இரு வீரர்களையும் அந்தந்த அணிகள் பணம் அளித்து வாங்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மும்பை இந்தியன்ஸ் அணி, அனுபவ வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான ஷர்துல் தாக்கூரை தங்கள் அணிக்குக் கொண்டு வருவதில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. அதற்காக, தங்கள் அணியில் உள்ள இளம் வீரர் அர்ஜுன் டெண்டுல்கரை லக்னோ அணிக்கு விட்டுக்கொடுக்க அவர்கள் தயாராக இருப்பதாகத் தெரிகிறது.
சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன் டெண்டுல்கர், 2023-ல் மும்பை அணிக்காக அறிமுகமானார். இதுவரை 5 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள அவர், 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறியபோதிலும், 2025 மெகா ஏலத்தில் அவரை ₹30 லட்சம் அடிப்படை விலைக்கு மும்பை அணி மீண்டும் ஏலத்தில் எடுத்தது. தற்போது அனுபவ வீரருக்காக அவரைப் பரிமாற்றம் செய்ய மும்பை அணி திட்டமிட்டுள்ளது.
மறுபுறம், இந்திய அணியின் அனுபவ வீரரான ஷர்துல் தாக்கூர், 2025 மெகா ஏலத்தில் எந்த அணியாலும் வாங்கப்படாத நிலையில், லக்னோ அணியில் காயமடைந்திருந்த வேகப்பந்து வீச்சாளர் மோசின் கானுக்கு மாற்று வீரராக இணைந்தார். தனக்குக் கிடைத்த வாய்ப்பைச் சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்ட அவர், கடந்த சீசனில் லக்னோ அணிக்காக 10 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளை வீழ்த்தி கவனத்தை ஈர்த்தார்.
பேட்டிங்கில் பெரிதாகச் சோபிக்காவிட்டாலும், அவரது பந்துவீச்சு மற்றும் அனுபவம் மும்பை அணியின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வீரர்கள் பரிமாற்றம் குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்துமுடிந்து விட்டதாகவும் நவம்பர் 15-ம் தேதிக்குள் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.