
தேர்தல் தேதியைத் தெரிந்து கொண்ட பின்னர் ஐபிஎல் போட்டிகளின் தேதி, நடத்தும் இடம் ஆகியவற்றை தீர்மானிக்கலாம் என்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துளளது.
தேர்தல் சமயத்தில் ஐபிஎல் போட்டிகள் நடந்தால் பாதுகாப்பு தர இயலாது என்று ஏற்கனவே மத்திய உள்துறை அமை்ச்சர் சுஷில் குமார் ஷிண்டே கூறியுள்ளார். இதையடுத்து தென் ஆப்பிரிக்காவுக்கு ஐபிஎல் போட்டிகள் மாற்றப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த நிலையில்தான் தேர்தல் தேதியைத் தெரிந்து கொண்ட பின்னர் ஐபிஎல் தேதியை முடிவு செய்ய வாரியம் தீர்மானித்துள்ளதாம்.
புவனேஸ்வரில் இன்று கிரிக்கெட் வாரியத்தின் செயல் திட்டக் குழுக் கூட்டம் நடந்தது. அப்போது உள்துறை அமைச்சகம் இப்படிச் சொல்லியுள்ளது குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது. இதன் இறுதியில், தேர்தல் தேதி அறிவிக்கப்படும் வரை பொறுத்திருப்பது, அதன் பின்னர் போட்டி தேதியை முடிவு செய்வது என்று தீர்மானிக்கப்பட்டது.
ஏப்ரல் 9ம் தேதி தொடங்கி ஜூன் 3ம் தேதி வரை ஐபிஎல் போட்டிகளை நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருந்தது. ஆனால் தற்போது தேர்தல் குறுக்கிடுவதால் போட்டிகளுக்கு முழுமையான பாதுகாப்பு தர முடியாது என்று மத்திய அரசு கூறி விட்டது.
இன்றைய கூட்டம் குறித்து பிசிசிஐ தலைவர் சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஐபிஎல் போட்டி நடைபெறும் இடங்கள் குறித்த இறுதி முடிவு, தேர்தல் தேதியைத் தெரிந்து கொண்ட பின்னர் முடிவு செய்யப்படும்.
தேவைப்பட்டால் போட்டியின் சில பகுதிகள் வெளிநாட்டில் நடைபெறும். ஏற்கனவே தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் போட்டியை நடத்த ஆர்வம் தெரிவித்துள்ளன என்றார் சீனிவாசன்.
ஏற்கனவே 2வது ஐபிஎல் போட்டித் தொடரை தென் ஆப்பிரிக்காவில் இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தியது அப்போதும். தேர்தல் குறுக்கிட்டதால்தான் போட்டியை மொத்தமாக அங்கு தூக்கிப் போய் விட்டார் அப்போதைய ஐபிஎல் கமிஷனர் லலித் மோடி என்பது நினைவிருக்கலாம்.