கட்டாக்: மகாராஷ்டிராவில் வறட்சி காரணமாக மாற்றப்படும் ஐ.பி.எல் போட்டிகளை நடத்தத்தயார் என்று ஒடிசா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
ஐ.பி.எல்.20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளை மகாராஷ்டிர மாநிலத்தில் மும்பை, புனே, நாக்பூர் ஆகிய நகரங்களில் மொத்தம் 20 ஆட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் உள்ளூர் ஆட்டம் மற்றும் இறுதிப்போட்டி ஆக மொத்தம் 8 ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்திலும், ரைசிங் புனே அணியின் உள்ளூர் ஆட்டம் மற்றும் எலிமினேட்டர், குவாலிபையர் ஆக மொத்தம் 9 போட்டி புனே மைதானத்திலும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் 3 உள்ளூர் ஆட்டம் ஆகியவை மகாராஷ்டிராவில் நடத்த திட்டமிட்டு போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டது.
வறட்சி காரணமாக மைதான பராமரிப்பு தண்ணீர் பயன்படுத்துவதால் போட்டியை மாற்ற வேண்டும் என்று பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் மும்பை ஹைகோர்ட் அதிரடியான உத்தரவை பிறப்பித்தது. அதன்படி வருகிற 30 ஆம் தேதிக்கு பிறகு நடைபெறும் ஐ.பி.எல். ஆட்டங்களை மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து மாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து மாற்றப்படும் ஐ.பி.எல் போட்டிகளை கட்டாக்கில் நடத்த தயார் என்று ஒடிசா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. அரசு எங்களுக்கு ஆதரவு அளித்தால் பாரபதியில் மைதானங்கள் தயார் நிலையில் உள்ளது என்று ஒடிசா கிரிக்கெட் வாரிய செயலாளர் அஷிர்பத் பெகெரா கூறியுள்ளார். இருப்பினும் பிசிசிஐ இதுவரை தங்களை இது தொடர்பாக அணுகவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.