“ஐபிஎல் கிரிக்கெட்டே இல்லை.. பாகிஸ்தானின் பிஎஸ்எல்-தான் உண்மையான கிரிக்கெட்”.. SA வீரர் ரூசோ பேச்சு
லாகூர்: தென்னாப்பிரிக்க அதிரடி பேட்ஸ்மேன் ரிலே ரூசோ, இந்திய ஐபிஎல் மற்றும் பாகிஸ்தான் பிஎஸ்எல் தொடர்களை ஒப்பிட்டுப் பேசி புதிய விவாதத்தை கிளப்பியுள்ளார். தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) தொடரில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்காக விளையாடி வரும் அவர், ஐபிஎல் தொடரை விட பிஎஸ்எல் தொடரே சிறந்தது எனக் கூறியுள்ளார்.
இது குறித்து ரிலே ரூசோ கூறுகையில், "இரண்டு லீக் தொடர்களிலும் சாதக பாதகங்கள் உள்ளன. ஐபிஎல் என்பது மிக நீண்ட தொடர். ஆனால், பிஎஸ்எல் மிகக் குறுகிய காலத்திற்குள் விறுவிறுப்பாக நடக்கும் தொடர். அங்கு ஆடுகளத்தில் போட்டி மிகவும் கடுமையாக இருக்கும். ஐபிஎல் தொடரின் பின்னணியில் பாலிவுட் சினிமா நட்சத்திரங்கள் இருப்பதால், அது உண்மையான கிரிக்கெட்டை விட ஒரு சினிமா போலத்தான் இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கராச்சி கிங்ஸ் அணிக்காக விளையாடும் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜாம்பாவும் ஐபிஎல் தொடரை விட பிஎஸ்எல் தொடரையே விரும்புவதாகக் கூறியிருந்தார். ஐபிஎல் தொடரில் இரண்டு மாதங்கள் விளையாடினாலும், ஒரு சிறப்பு சுழற்பந்து வீச்சாளருக்கு வழங்கப்படும் ஊதியம் திருப்திகரமாக இல்லை என அவர் அதிருப்தி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சர்ச்சையாகப் பேசியுள்ள ரிலே ரூசோவின் ஐபிஎல் பயணம் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. கடந்த 2011 முதல் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்று வரும் இவர், பெங்களூரு, டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார். மொத்தம் 22 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 473 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். கடந்த 2024-ல் பஞ்சாப் கிங்ஸ் அணி இவரை 8 கோடி ரூபாய்க்கு வாங்கியது. ஆனால், 2025 மெகா ஏலத்தில் அடிப்படை விலையான 2 கோடி ரூபாய்க்கு கூட இவரை வாங்க எந்த அணியும் முன்வரவில்லை.
தற்போது பிஎஸ்எல் தொடரில் சுமார் 1.66 கோடி ரூபாய் மதிப்பிலான தொகைக்கு அவர் விளையாடி வருகிறார். அங்கு விளையாடிய 4 போட்டிகளில் 19.75 என்ற சராசரியில் வெறும் 79 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஐபிஎல் ஏலத்தில் புறக்கணிக்கப்பட்ட விரக்தியில் ரூசோ இதுபோன்று பேசுவதாக இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications