மும்பை: விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்காததற்கு வருந்துவதாகவும், அதற்காக, ஐபிஎல் போட்டியை மும்பையை விட்டு மாற்றுவதால் தீர்வு கிடைக்காது என்றும், முன்னாள் கிரிக்கெட் வீரர் விவிஎஸ்.லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் கடுமையான குடிநீர் பஞ்சம் நிலவுவதாலும், பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்படுவதாலும், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை அம்மாநிலத்தில் நடத்தக்கூடாது என்ற பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.

இதுகுறித்து லட்சுமணன் கருத்து கூறியதாவது; இந்த பிரச்சினையில் மூல வேர் எது என்பதை கண்டறிய வேண்டும். மும்பையிலிருந்து போட்டியை நீக்கிவிட்டால் இந்த பிரச்சினை சரியாகிவிடும் என்று கருத முடியாது.
பருவமழை பொய்த்துவிட்டதால் தண்ணீர் இல்லாத பிரச்சினை மகாராஷ்டிராவில் மட்டும் கிடையாது. நாடு முழுவதுமே அதே நிலை உள்ளது. மேலும், ஐபிஎல் யாரோ தனிப்பட்ட நபர்களுக்கு மட்டுமே நன்மை தரும் விளையாட்டு கிடையாது.
ஐபிஎல் ஆட்டம் நாட்டு பொருளாதாரத்திலும் தனக்கே உரிய அளவில் பங்களிப்பை வழங்கிவருகிறது. விவசாயிகள் நிலைமைக்காக வருத்தப்படும் அதே நிலையில், ஐபிஎல் போட்டியை தள்ளி வைப்பதால் எந்த பலனும் ஏற்பட போவதில்லை. இவ்வாறு லட்சுமணன் தெரிவித்தார்.