டப்ளின்: அயர்லாந்து கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகும் ஆட்டத்தின் முதல் நாளில் ஒரு பந்து கூட வீசப்படவில்லை. மழையில் முதல் நாள் ஆட்டம் பாதிக்கப்பட்டது.
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஜிம்பாப்வே, வங்கதேசம் என, 10 நாடுகள் மட்டுமே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் நாடுகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தானை டெஸ்ட் போட்டியில் விளையாடும் நாடுகளாக ஐசிசி கடந்த ஆண்டு அங்கீகாரம் அளித்துள்ளது.
இதில் ஆப்கானிஸ்தான், ஜூன் 14ல் பெங்களூருவில் துவங்கும் டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக அறிமுகமாகிறது.
அயர்லாந்து அணி, பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகிறது. அயர்லாந்தின் டப்ளின் நகரில் இன்று இந்த டெஸ்ட் போட்டி துவங்குவதாக இருந்தது.
ஆனால், தொடர்ந்து மழை பெய்ததால், ஒரு பந்து கூட வீசப்படாமல் முதல் நாள் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் அயர்லாந்து வீரர்களும், ரசிகர்களும் வெறுப்படைந்தனர்.
தொடர்ந்து மூன்று நாள்கள் மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. அதனால் இரண்டாம் நாள் ஆட்டமும் பாதிக்கப்படுமா என்ற சோகத்தில் ரசிகர்கள் உள்ளனர்.