டப்ளின்: டெஸ்ட் கிரிக்கெட்டில் 2018ம் ஆண்டி புதிய மைல்கல்லை எட்ட உள்ளது. இந்த ஆண்டில் இரண்டு அணிகள் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகின்றன. அதில் அயர்லாந்து அணி தனது முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானுடன் 11ம் தேதி விளையாடுகிறது.
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஜிம்பாப்வே, வங்கதேசம் என, 10 நாடுகள் மட்டுமே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் நாடுகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தானை டெஸ்ட் போட்டியில் விளையாடும் நாடுகளாக ஐசிசி கடந்த ஆண்டு அங்கீகாரம் அளித்துள்ளது.
இதில் ஆப்கானிஸ்தான், ஜூன் 14ல் பெங்களூருவில் துவங்கும் டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக அறிமுகமாகிறது.
அயர்லாந்து அணி, பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகிறது. அயர்லாந்தின் டப்ளின் நகரில் நாளை மறுதினம் நடக்கும் ஆட்டத்தில் பங்கேற்பதன் மூலம், டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் 11வது நாடாகிறது அயர்லாந்து.
2006ல் ஒருதினப் போட்டிகளில் அறிமுகமான அயர்லாந்து, இதுவரை 138 ஆட்டங்களில் 60ல் வென்றுள்ளது. 66ல் தோல்வியடைந்துள்ளது. 61 டி-20 போட்டிகளில் விளையாடி 26ல் வென்றுள்ளது.
ஒருதினப் போட்டிகள் மற்றும் டி-20 போட்டிகளில் விளையாடிய அனுபவமுள்ள அயர்லாந்து வீரர்கள், முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் களமிறங்குகின்றனர்.
2000ம் ஆண்டில் வங்கதேசம் அணி டெஸ்ட் அந்தஸ்தை பெற்றது. அதற்கு 18 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகிறது அயர்லாந்து அணி.
1877ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியது. அதன்பிறகு, இதுவரை அறிமுகமான எந்த அணியும் தனது அறிமுகப் போட்டியில் வென்றதில்லை.
சொந்த மண்ணில் அறிமுகமாவது அயர்லாந்து அணிக்கு மிகப் பெரிய சாதகமான அம்சமாகும். அதனால், அந்த சாதனையை முறியடிப்போம் என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளது.