
மெகா அதிர்ச்சி
அயர்லாந்து அணி எப்போதும் மிகப்பெரிய அணிகளுக்கு அதிர்ச்சி கொடுப்பதில் கில்லாடி தான். பாகிஸ்தான், இங்கிலாந்து போன்ற டாப் அணிகளை உலகக் கோப்பை தொடரிலேயே கதற விட்டிருக்கின்றனர். 2011 உலகக் கோப்பை போட்டியில், இங்கிலாந்து அணியை 300 ரன்களுக்கு மேல் சேஸ் செய்து மெகா அதிர்ச்சி கொடுத்ததை ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்திருக்க மாட்டார்கள்.

346 ரன்கள்
இந்த நிலையில், அயர்லாந்து - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி, தலைநகர் டுப்ளினில் நேற்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய மலன் 177 ரன்கள் எடுத்து இறுதிவரை களத்தில் இருந்தார். அதேபோல், டி காக் 120 எடுத்து ஆட்டமிழந்தார். இதனால், அந்த அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 346 ரன்கள் குவித்தது.

அபார சாதனை
இதையடுத்து, கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து அணியில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் இழந்தன. ஆனால், எட்டாவது வீரராக களமிறங்கிய சிமி சிங் என்ற வீரர் அடி வெளுத்துவிட்டார். அவர் 91 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். இதன் மூலம் 8வது வீரராக களமிறங்கி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சதம் அடித்த முதல் வீரர் எனும் பெருமையை படைத்துள்ளார். இவர் இந்தியாவின் பஞ்சாபில் பிறந்து அயர்லாந்தில் குடிபெயர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நிரூபித்த அயர்லாந்து
எனினும், அயர்லாந்து 47.1 வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 276 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால், தென்னாப்பிரிக்கா 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இதன் மூலம், ஒருநாள் தொடர் 1- 1 என்ற கணக்கில் சமனானது. என்னதான் தோற்றாலும், இரண்டு போட்டியிலும் அயர்லாந்து அணி மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி தங்களது திறனை நிரூபித்து இருக்கிறது. எதிர்வரும் டி20 உலகக் கோப்பைத் தொடருக்கு, அந்த அணி தகுதி பெறும் பட்சத்தில், நிச்சயம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications











