டப்ளின்: அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றிபெற 140 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறப்பாக ஆடிய அதிரடி வீரர் மெக்கர்தி கடைசி பந்தில் சிக்சர் விளாசி அரைசதத்தை எட்டினார்.
அயர்லாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் இந்திய அணிக்கு நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தலைமையேற்றுள்ளார். 11 மாதங்களுக்கு பின் பும்ரா காயத்தில் இருந்து மீண்டு வந்திருப்பதால், அவர் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்தது. இந்த நிலையில் முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் பும்ரா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து அயர்லாந்து அணி தரப்பில் பால்பர்னி - ஸ்டிர்லிங் ஜோடி தொடக்கம் கொடுத்தது. இந்தப் பக்கம் இந்திய அணி தரப்பில் முதல் ஓவரை பும்ரா வீசினார். அவர் வீசிய 2வது பந்திலேயே பால்பர்னி 4 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து 5வது பந்தில் விக்கெட் கீப்பர் டக்கர் டக் அவுட்டாகி வெளியேறினார். இதனால் அயர்லாந்து அணி 4 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து கேப்டன் ஸ்டிர்லிங் - டெக்டர் இணை நிதானமாக விளையாடியது.
இதையடுத்து அறிமுக வீரர் பிரசித் கிருஷ்ணா அட்டாக்கில் கொண்டு வரப்பட்ட நிலையில், நிதானமாக ஆடிய டெக்டர் 9 ரன்களில் ஆட்டமிழக்க, ரவி பிஷ்னாய் வீசிய அடுத்த ஓவரிலேயே கேப்டன் ஸ்டிர்லிங்கும் 11 ரன்களில் வீழ்ந்தார். இதனால் 27 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை அயர்லாந்து அணி இழந்தது. தொடர்ந்து வந்த டாக்ரெல் 1 ரன்னில் ஆட்டமிழக்க, 11 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 59 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர் குர்திஸ் - மெக்கர்த்தி இருவரும் இணைந்து போராட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக அதிரடி வீரர் மெக்கர்தி ஒவ்வொரு ஓவருக்கும் ஒரு பவுண்டரியை விளாச தொடங்கினார். குறிப்பாக பும்ரா வீசிய 16வது ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட 13 ரன்கள் விளாசப்பட்டது. தொடந்து பிரசித் கிருஷ்ணா ஓவரில் இரு பவுண்டரி, ஒரு சிக்சர் உட்பட 15 ரன்கள் விளாசப்பட்டது. பின்னர் சிறப்பாக ஆடிய குர்திஸ் 39 ரன்களில் ஆட்டமிழக்க, 19 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 117 ரன்கள் சேர்த்திருந்தது.
இந்த நிலையில் கடைசி ஓவரை வீச அர்ஷ்தீப் சிங் அழைக்கப்பட்டார். அந்த ஓவரில் இரு சிக்சர், ஒரு பவுண்டரி விளாசப்பட்ட, 20 ஓவர்களில் அயர்லாந்து அணி 139 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய அதிரடி வீரர் மெக்கர்தி கடைசி பந்தில் சிக்சர் விளாசி 33 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். இந்திய அணி தரப்பில் பும்ரா, பிரசித் கிருஷ்ணா மற்றும் ரவி பிஷ்னாய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.