ஸ்டார்மான்ட்: ஜிம்பாப்வே - அயர்லாந்து அணிகள் மோதிய டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணியின் விக்கெட் கீப்பர் செய்த மோசமான சாதனை கிரிக்கெட் உலகில் வேடிக்கையாக பேசப்பட்டு வருகிறது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்க்ஸில் ஜிம்பாப்வே அணியை விட அயர்லாந்து அணி 40 ரன்கள் அதிகமாக சேர்த்தது.
ஆனால், ஜிம்பாப்வே அணியில் அறிமுகமான விக்கெட் கீப்பர் கிளைவ் மடான்டே 42 ரன்களை பை (Bye) ரன்களாக விட்டுக் கொடுத்து இருந்தார். அந்த பை ரன்கள் அயர்லாந்து அணிக்கு கிடைத்தது. ஆனால், இதில் கிளைவ் மடான்டேவின் தவறுகள் மிகவும் குறைவு தான். ஜிம்பாப்வே பந்துவீச்சாளர்கள் மோசமாக பந்து வீசியதே இத்தனை பை ரன்கள் செல்ல முக்கிய காரணமாக இருந்தது.

தனது அறிமுக போட்டியில் கிளைவ் மடான்டே இந்த மோசமான நிகழ்வுகளால் நொந்து போனார். அது மட்டும் இன்றி இதுவே கிரிக்கெட் உலகின் படுமோசமான விக்கெட் கீப்பிங் சாதனையாகவும் அமைந்தது. இந்த போட்டியில் ஜிம்பாவே அணி முதலில் பேட்டிங் செய்து முதல் இன்னிங்ஸில் 210 ரன்கள் எடுத்தது. கிளைவ் மடான்டே தனது அறிமுகப் போட்டியில் டக் அவுட் ஆகி இருந்தார்.
அடுத்து அயர்லாந்து அணி பேட்டிங் செய்தபோது ஜிம்பாப்வே அணியின் பவுலர்கள் நிறைய பந்துகளை லெக் திசையில் வீசினர். விக்கெட் கீப்பர் கிளைவ் மடான்டே-வால் பல பந்துகளை பிடிக்க முடியாமல் போனது. மேலும், அயர்லாந்து பேட்ஸ்மேன்கள் மிகவும் தாமதமாக பேட்டை சுழற்றினர். அதனால், பின்னே நின்று இருந்த விக்கெட் கீப்பர் கிளைவ் மடான்டே பந்தை பிடிக்க முடியாமல் சிரமப்பட்டார்.
இப்படி பல்வேறு நிகழ்வுகளால் மொத்தம் 42 பை ரன்கள் அயர்லாந்து அணிக்கு கிடைத்தது. டெஸ்ட் வரலாற்றில் ஒரே இன்னிங்ஸில் அதிக பை ரன்கள் விட்டுக் கொடுக்கப்பட்டது இந்த போட்டியில் தான். இதற்கு முன்பு இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் லேஸ் ஆமெஸ் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 1934-இல் 37 பை ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார். 90 ஆண்டுகளுக்கு கழித்து அந்த சாதனையை முறியடித்து இருக்கிறார் ஜிம்பாப்வே அணி விக்கெட் கீப்பர் கிளைவ் மடான்டே. இந்த போட்டியில் அயர்லாந்து அணி முதல் இன்னிங்ஸில் 250 ரன்கள் சேர்த்தது. அடுத்து ஜிம்பாப்வே அணி இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 12 ரன்கள் எடுத்து இருந்தது.