டார்மன்ட்: ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணிகள் மோதிய டெஸ்ட் போட்டியில் வேடிக்கையான சம்பவம் ஒன்று நடைபெற்றது. ஜிம்பாப்வே ஃபீல்டர் உயிரைக் கொடுத்து ஓடிப் போய் பவுண்டரியை தடுத்தார். ஆனால், அதற்குள் அயர்லாந்து வீரர்கள் ஐந்து ரன்கள் ஓடினர். இந்த சுவாரஸ்யமான சம்பவம் கிரிக்கெட் உலகில் வேகமாக பரவி வருகிறது.
ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணிகள் மோதிய ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கடந்த ஜூலை 25 அன்று தொடங்கி நடைபெற்றது. ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்து முதல் இன்னிங்க்ஸில் 210 ரன்கள் எடுத்தது. அடுத்து அயர்லாந்து அணி 250 ரன்கள் எடுத்தது. முதலில் இன்னிங்ஸிலேயே ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்தது.

அயர்லாந்து அணியின் ஸ்கோரில் 42 ரன்கள் பை ரன்கள் மூலமாக கிடைத்தது. அதாவது, பந்து பேட்டில் படாமலேயே அயர்லாந்து வீரர்கள் ஓடி ரன் எடுத்தனர். சில சமயம் பந்து பேட்டில் படாமல் பவுண்டரிக்கும் சென்று இருந்தது. அந்த வகையில் பேட்டில் படாமலேயே அயர்லாந்து 42 ரன்கள் சேர்த்து இருந்தது. முதல் இன்னிங்ஸில் அயர்லாந்து அணி 40 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்ற நிலையில், ஜிம்பாப்வே செய்த தவறுகளால் குறிப்பாக விக்கெட் கீப்பர் கிளைவ் மடாண்டே சரியாக பந்தை பிடிக்காததால் 42 ரன்கள் பை மூலமாக அந்த அயர்லாந்து அணிக்கு கிடைத்தது.
இதை அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் ஜிம்பாப்வே அணி 197 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி இருந்தது. 158 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் அயர்லாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸை ஆடியது. அப்போது 18 வது ஓவரில் அயர்லாந்து வீரர் ஆன்டி மெக்பிரைன் பந்தை ஆஃப் சைடில் அடித்தார்.
அந்த பந்தை பிடிப்பதற்காக ஜிம்பாப்வே ஃபீல்டர் வேகமாக ஓடினார். சரியாக பவுண்டரி எல்லைக்கு ஒரு சில இன்ச் தூரத்தில் பந்தை உள்ளே தள்ளிவிட்டார் பீல்டர். ஆனால், ஓடி வந்த வேகத்தில் அவர் பவுண்டரி எல்லையை தாண்டி சில அடி தூரம் ஓடிச் சென்றார். பின்னர் அவர் மீண்டும் உள்ளே ஓடி வந்து பந்தை எடுத்து வீசினார்.
இந்த இடைவெளியில் அயர்லாந்து வீரர்கள் ஐந்து ரன்கள் ஓடி முடித்து இருந்தனர். ஒருவேளை பந்தை பவுண்டரிக்கு விட்டிருந்தால் கூட நான்கு ரன்கள் மட்டுமே அதிகபட்சமாக அயர்லாந்து அணிக்கு கிடைத்திருக்கும். ஆனால், உயிரைக் கொடுத்து பந்தை பவுண்டரிக்கு செல்லாமல் தடுத்ததால் அயர்லாந்து 5 ரன்கள் எடுத்தது. இந்த வேடிக்கையான சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. பின்னர் இந்தப் போட்டியில் அயர்லாந்து அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.