லார்ட்ஸ்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா பந்து வீச பயன்படுத்தப்பட்டவிதம் குறித்து முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். போட்டியின் முக்கியமான தருணங்களில் பும்ராவின் "பணிச்சுமையை" காரணம் காட்டி, குறிப்பிட்ட பேட்ஸ்மேன் வரும் வரை பந்துவீசாமல் காத்திருந்த வியூகம் தவறானது என்று அவர் சாடியுள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில், பும்ரா ஆரம்பத்தில் 5 ஓவர்களை மட்டுமே வீசினார். அதன்பின், இங்கிலாந்தின் முக்கிய வீரரான ஜோ ரூட் பேட்டிங் செய்ய வரும் வரை பந்துவீசாமல் இருந்தார். இந்த உத்தியை இர்பான் பதான் கடுமையாகக் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து தனது யூடியூப் பக்கத்தில் பேசிய இர்பான் பதான், "இரண்டாவது டெஸ்டில் பணிச்சுமை காரணமாக பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அப்படி ஓய்வுக்குப் பின் களமிறங்கிய ஒருவரை, மூன்றாவது போட்டியில் முக்கிய பேட்ஸ்மேன் வரும்போது மட்டுமே பந்துவீச வைத்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு போட்டியில் நீங்கள் விளையாடும்போது, பணிச்சுமை என்ற பேச்சுக்கே இடமில்லை. எல்லா வகையிலும் போட்டியை வெல்வதே நோக்கமாக இருக்க வேண்டும்" என்று கூறினார்.
இங்கிலாந்து வீரர்களின் அர்ப்பணிப்பை சுட்டிக்காட்டிய பதான்:
இங்கிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகியோரின் அர்ப்பணிப்பை உதாரணமாகக் காட்டி, இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பின்தங்கிவிட்டதாக பதான் வேதனை தெரிவித்தார்.
"பென் ஸ்டோக்ஸ் ஐந்தாம் நாள் காலை தொடர்ந்து 9.2 ஓவர்கள் வரை பந்து வீசினார். அவர் ஒரு அற்புதமான வீரர். பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டதோடு, ரிஷப் பண்ட்டின் முக்கியமான ரன் அவுட்டிற்கும் காரணமாக இருந்தார். ஆனால், அவரிடம் பணிச்சுமை மேலாண்மை பற்றி எந்தப் பேச்சும் இல்லை" என்று பதான் குறிப்பிட்டார்.
மேலும், "சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் போட்டிக்குத் திரும்பிய ஆர்ச்சர்கூட பந்து வீசுவதை நிறுத்தவில்லை. காலையில் ஒரு நீண்ட ஸ்பெல் வீசிவிட்டு, மீண்டும் பந்துவீச வந்தார். ஆனால், நமது பும்ரா 5 ஓவர்கள் வீசிவிட்டு, ஆட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய நேரத்தில் ஜோ ரூட்டுக்காக காத்திருந்தது ஏமாற்றமளிக்கிறது," என பதான் கூறினார்.
இந்தியா முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்தின் ஸ்கோரை சமன் செய்தாலும், ஐந்தாம் நாள் ஆட்டத்தின் தொடக்கத்தில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சரின் பந்துவீச்சு, இந்திய அணியின் மிடில்-ஆர்டரை நிலைகுலையச் செய்தது. இறுதியில், இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.
பும்ரா முதல் இன்னிங்ஸில் 27 ஓவர்கள் வீசி 5 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 16 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். உண்மையில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சக இந்திய பந்துவீச்சாளர்களை விட பும்ராதான் அதிக ஓவர்களை வீசினார். ஆனாலும், இர்பான் பதான் அவரை விமர்சித்து இருக்கிறார்.