மும்பை : முன்னாள் ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கருக்கு தொடர்ந்து குத்துக்களை விட்ட பாக்சிங் ஜூனியர் சமூக வலைதளத்தில் கவனத்தை பெற்றுள்ளார்.
சாலை பாதுகாப்பு உலக தொடரில் தற்போது சச்சின் டெண்டுல்கர் மற்றும் இர்பான் பதான் ஆகியோர் விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில் இர்பான் பதானின் மகனுடன் கொஞ்சி விளையாடிய சச்சின் டெண்டுல்கர், அவன் விட்ட பாக்சிங் குத்துக்களை வாங்கிக்கொண்டு, பிற்காலத்தில் தன்னுடைய மற்றும் இர்பான் பதானுடையதை போல அவனுடைய தசைகளும் வலிமையாக மாறிவிடும் என்று கூறியுள்ளார்.
முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் இர்பான் பதான் ஆகியோர் தற்போது சாலை பாதுகாப்பு உலக தொடர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று ஆடிவருகின்றனர். இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதவுள்ள இந்த டி20 தொடரில் இந்த நாடுகளின் சிறந்த முன்னாள் வீரர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு ஆடுகின்றனர்.
இந்த தொடரின் முக்கிய குறிக்கோள் மக்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே. மேலும் சாலைகளில் அவர்கள் விதிகளை பயன்படுத்தும் வகையில் மனநிலையை மாற்றுவதும் இதன் முக்கிய நோக்கம். இதன் முதல் போட்டி கடந்த 7ம் தேதி இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற நிலையில், இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை இடையில் இன்று அடுத்த போட்டி நடைபெறவுள்ளது.
தான் விளையாடிய காலத்தில் பல்வேறு ஹிட்டுகளுக்கு சொந்தக்காரராக விளங்கிய சச்சின் டெண்டுல்கரின் பல்வேறு சாதனைகள் இன்னும் முறியடிக்கப்படாமல் உள்ளன. இந்நிலையில், இர்பான் பதானின் மகன் இம்ரானிடம் சச்சின் பல்வேறு பாக்சிங் ஹிட்டுகளை வாங்கியுள்ளார். இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள இர்பான் பதான், அவன் தான் என்ன செய்கிறோம் என்பது தெரியாமல் செய்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். அவன் வளர்ந்ததும் இதுகுறித்து தெரிந்துக் கொள்வான் என்றும் கூறியுள்ளார்.
இதையடுத்து இந்த வீடியோவிற்கு தன்னுடைய டிவிட்டரில் பதிலளித்த சச்சின் டெண்டுல்கர், சிறிய குழந்தைகளுடன் விளையாடுவது எப்போதுமே மகிழ்ச்சியை அளிக்கக்கூடியது என்று தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடையது மற்றும் இர்பான் பதானுடையதை போல இம்ரானின் தசைகளும் ஒருநாள் மிக வலிமையாக மாறும் என்று இம்ரானுக்கு தெரிவித்துள்ளார்.