மும்பை : சில நாட்கள் முன்பு எல்லோரையும் பயன்படுத்தி விட்டு தூக்கி எறிவதே ஹர்திக் பாண்டியாவின் வேலை என அவர் பெயர் சொல்லாமல் மறைமுகமாக சாடி இருந்தார் இர்பான் பதான்.
தற்போது ரோஹித் சர்மாவின் கேப்டன் பதவியை குறி வைத்து பாண்டியா வேலை செய்கிறார் என சூசகமாக கூறி அவரை விளாசி இருக்கிறார். ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா அணி தாவி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வருவதை பற்றித் தான் இர்பான் பதான் இப்படி கூறி இருக்கிறார்.
2022 ஐபிஎல் தொடரில் புதிய அணியான குஜராத் டைட்டன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவை ஏலத்திற்கு முன்பே தேர்வு செய்தது. அவரை அந்த அணி கேப்டனாகவும் ஆக்கியது. அப்போது தன்னை அடையாளம் கண்டு வளர்த்த மும்பை இந்தியன்ஸ் அணியை அவர் கண்டு கொள்ளவில்லை.

2022 ஐபிஎல் ஏலத்துக்கு முன் மும்பை அணி ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், பும்ரா, கீரான் பொல்லார்டு ஆகிய நால்வரை மட்டும் தக்க வைத்தது. பாண்டியாவை அணியில் இருந்து விடுவித்தது. குஜராத் அணிக்கு செல்லும் முடிவில் இருந்ததால் தான் அவர் தன்னை மும்பை அணியிடம் விடுவிக்குமாறு கூறி இருக்கலாம் என அப்போது ஒரு தகவல் பரவியது.
அதன் பின் அணி மாறி வந்த பாண்டியாவுக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் பதவியை அளித்தது. அவரும் அந்த அணியை இரண்டு முறை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார். ஒரு முறை கோப்பை வென்று கொடுத்தார். எல்லாம் நன்றாக இருந்த நிலையில் தற்போது மீண்டும் மும்பை அணிக்கு அவரின் விருப்பத்தின் பேரிலேயே தாவி இருக்கிறார் பாண்டியா.
ஒரு கேப்டனாக இருந்து தற்போது மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வந்திருக்கும் அவருக்கு கேப்டன் பதவி அளிக்கப்படும் என தகவல்கள் வெளியான நிலையில் இர்பான் பதான் அதெல்லாம் நடக்காது என கூறி இருக்கிறார். எதிர்காலத்தில் வேண்டுமானால் அவர் கேப்டன் ஆகலாம். ஹர்திக் பாண்டியாவால் மும்பை அணிக்கு எந்த லாபமும் இல்லை எனக் கூறி இருக்கிறார்.
"மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா ஒரு மலை. அந்த அணிக்கு ஐந்து முறை கோப்பை வென்று கொடுத்துள்ளார். அவர் அந்த அணியில் இருக்கும் வரை அவர் தான் கேப்டன். ஹர்திக் பாண்டியாவால் கேப்டன் ஆகவே முடியாது. மும்பை இந்தியன்ஸ் அணியில் பல ஆல் - ரவுண்டர்கள் இருக்கிறார்கள். ஹர்திக் அந்த இடத்தையும் நிரப்ப வரவில்லை. ரோஹித் ஓய்வு பெறும் போது பாண்டியா கேப்டன் ஆகலாம்." என கூறி இருக்கிறார் இர்பான் பதான்.