சிட்னி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் மூத்த வீரர் விராட் கோலி மிக மோசமாக செயல்பட்டு இருந்தார். அவர் 2024 ஆம் ஆண்டில் 24.52 என்ற பேட்டிங் சராசரி மட்டுமே வைத்து இருந்தார். மேலும், முதல் இன்னிங்ஸில் அவர் சரியாக ரன் சேர்க்கவில்லை என சுட்டிக்காட்டி இர்பான் பதான் கடும் விமர்சனத்தை முன் வைத்து இருக்கிறார்.
விராட் கோலி ஐந்து ஆண்டுகளாக மோசமாக ஆடி வரும் நிலையில், அவர் இந்திய அணியில் ஆட தகுதியானவரா? என கேட்டு இருப்பதோடு, இது போன்ற மூத்த வீரரை அணியில் வைத்திருப்பதற்கு பதிலாக ஒரு இளம் வீரரை உருவாக்கினால் அவரும் கூட 25 முதல் 30 என்ற பேட்டிங் சராசரி வைத்திருப்பார் என கூறி இருக்கிறார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக விராட் கோலியின் பேட்டிங் சராசரி 26 என்பதாக மட்டுமே உள்ளது. அதை சுட்டிக்காட்டி தான் இர்பான் பதான் இந்த விமர்சனத்தை முன்வைத்து இருக்கிறார். இதன் மூலம், விராட் கோலியை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்பதையே அவர் கூறி இருக்கிறார். இந்த விமர்சனம் சமூக வலைதளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடின. இந்த தொடரில் விராட் கோலி ஒரு சதம் அடித்த போதும் ஒட்டுமொத்தமாக ஒன்பது இன்னிங்ஸ்களில் 190 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அவர் அடித்த சதத்தை நீக்கி விட்டு பார்த்தால் சரியாக எட்டு இன்னிங்ஸ்களில் 90 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார்.
இந்த தொடரில் அவரது பேட்டிங் சராசரி 23.75 என்பதாக இருந்தது. அது மட்டும் இன்றி 2024 ஆம் ஆண்டில் கோலியின் டெஸ்ட் பேட்டிங் சராசரி 24.52 ஆகும். அதிலும் முதல் இன்னிங்ஸில் மட்டும் எடுத்துக் கொண்டால் அவரது சராசரி 15 மட்டுமே.
இந்த அளவுக்கு மோசமாக ஆடி வரும் விராட் கோலிக்கு இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்பட்டு வருவது பற்றி பேசிய இர்பான் பதான், "2024 ஆம் ஆண்டில் முதல் இன்னிங்ஸில் மட்டும் விராட் கோலி 15 என்ற பேட்டிங் சராசரி வைத்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில் எடுத்துக் கொண்டால் அவரது பேட்டிங் சராசரி 30-ஐ கூட தாண்டவில்லை. இது போன்ற ஒரு மூத்த வீரர் இந்திய அணிக்கு தகுதியானவரா?" என கேள்வி எழுப்பு இருக்கிறார்.
என்னிடம் sandpaper இல்லை! பாக்கெட்டை பாருங்க! ஆஸி. ரசிகர்களை வச்சு செய்த கோலி.. என்ன நடந்தது?
மேலும், "விராட் கோலிக்கு பதிலாக ஒரு இளம் வீரருக்கு வாய்ப்பு கொடுத்து, அவரை நாம் தயார் செய்தால் அவரும் கூட 25 முதல் 30 வரை பேட்டிங் சராசரி வைத்திருப்பார். இங்கு நாம் அணியை பற்றி மட்டும் தான் பேசுகிறோம். தனிநபரை பற்றி அல்ல. இந்திய அணியில் சூப்பர் ஸ்டார் கலாச்சாரம் அதிக அளவில் உள்ளது. இனி சூப்பர் ஸ்டார் கலாச்சாரம் நமக்கு அவசியம் இல்லை. அணியை முன்னிறுத்தும் கலாச்சாரம் தான் அவசியம்." என்றார் இர்பான் பதான். பதானின் இந்த பேச்சுக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி உள்ளன. கோலி ரசிகர்கள் பதானை விமர்சித்து வருகின்றனர்.