மும்பை: இந்திய கிரிக்கெட்டின் கடவுள் எனப் போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர், பிசிசிஐ-யின் அடுத்த தலைவராக நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி, இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜூலை மாதம் நடைபெற்ற இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் போது சச்சின் டெண்டுல்கரை பிசிசிஐ தலைவராக நியமிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது. சச்சின் ரசிகர்கள் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும்? என காத்திருக்கின்றனர்.
1983 உலகக் கோப்பை வென்ற ரோஜர் பின்னி கடந்த இரண்டு ஆண்டுகளாக பிசிசிஐ தலைவராக இருந்தார். அவருக்கு சமீபத்தில் 70 வயது பூர்த்தியடைந்தது. பிசிசிஐ விதிகளின்படி, 70 வயதைக் கடந்தவர்கள் நிர்வாகப் பதவிகளில் நீடிக்க முடியாது என்பதால், அவர் தனது பதவியிலிருந்து விலகினார்.

இதைத் தொடர்ந்து, துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தற்காலிக பிசிசிஐ தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில், செப்டம்பர் மாதம் கடைசி வாரத்தில் நடைபெற உள்ள ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் (AGM) பிசிசிஐ நிர்வாகத்தின் தலைவர், செயலாளர், துணைத் தலைவர், ஐபிஎல் சேர்மன் உள்ளிட்ட முக்கியப் பதவிகளுக்கான தேர்தல் நடத்தப்பட உள்ளது.
இதில் சச்சின் எங்கே வந்தார்? என்றால் இங்கிலாந்தில் நடந்த ரகசிய சந்திப்பு ஒன்றை சுட்டிக் காட்டுகின்றனர். இது பற்றி 'தைனிக் ஜாக்ரன்' பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தியின்படி, சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபி டெஸ்ட் தொடரின்போது, சச்சின் டெண்டுல்கருடன் இதுகுறித்து அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன.
ஒரு மூத்த அரசியல் தலைவர், இங்கிலாந்தில் சச்சினை நேரில் சந்தித்து, பிசிசிஐ தலைவர் பதவியை ஏற்குமாறு கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. சச்சின் இதற்கு ஒப்புக்கொண்டாரா இல்லையா என்பது குறித்த உறுதியான தகவல் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
முன்னாள் வீரர்களை நிர்வாகப் பொறுப்புகளில் அமர்த்துவது பிசிசிஐ-யில் புதிய விஷயமல்ல. 2019-ல் சவுரவ் கங்குலி பிசிசிஐ தலைவரானார், அவரைத் தொடர்ந்து முன்னாள் வீரர் ரோஜர் பின்னி பொறுப்பேற்றார். அந்த வரிசையில், தற்போது சச்சினை நியமிக்கத் திட்டமிடப்படுவதாகத் தெரிகிறது.
விளையாட்டு அமைப்புகளில், விளையாட்டு வீரர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும் என்ற அரசு கொள்கை அடிப்படையில் பிசிசிஐ முன்னாள் வீரர்களை தலைவர்களாக ஆக்குவதாக தெரிகிறது. இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா இருப்பது இதற்குச் சிறந்த உதாரணம். அந்த வகையிலேயே, சச்சினை பிசிசிஐ தலைவராக்கும் இந்த முன்னெடுப்பும் பார்க்கப்படுகிறது.
பிசிசிஐ பதவிகளுக்குப் பெரும்பாலும் போட்டி இருக்காது. பிசிசிஐ அமைப்பின் முக்கியப் பிரமுகர்களின் ஒருமித்த கருத்துக்களின் அடிப்படையில் அனைத்து பதவிக்கான போட்டியின்றிதான் தேர்வு செய்யப்படுவார்கள். எனவே, சச்சின் இந்தப் பொறுப்பை ஏற்கச் சம்மதித்தால், அவர் அடுத்த பிசிசிஐ தலைவராவது கிட்டத்தட்ட உறுதியாகிவிடும். அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக கிரிக்கெட் உலகம் ஆவலுடன் காத்திருக்கிறது.