மும்பை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் 7 மாதங்களுக்கு பின் மீண்டும் இடம்பிடித்துள்ளார். இருப்பினும் அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அக்டோபர் - நவம்பர் மாதங்களில் ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. விரைவில் இதற்கான அட்டவணை பிரம்மாண்ட நிகழ்ச்சியுடன் வெளியிடப்படவுள்ளது. இந்தியாவில் உலகக்கோப்பை தொடர் நடப்பதால், இந்திய அணி நிச்சயம் உலகக்கோப்பை வெல்லும் முனைப்புடன் பயிற்சியை தொடங்கியுள்ளது. அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தின் போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது.

இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் இளம் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன் உள்ளிட்டோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக விக்கெட் கீப்பர் இடத்திற்கு இஷான் கிஷன் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 7 மாதங்களுக்கு பின் சஞ்சு சாம்சன் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். ஆனால் அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைப்பது சந்தேகம் என்றே பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் நீண்ட நாட்களாக இஷான் கிஷன் இந்திய அணியுடன் பயணித்து வருகிறார். இருப்பினும் அவர் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. கடைசியாக வங்கதேச அணிக்கு எதிராக இரட்டை சதம் விளாசிய பின்னரும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் களமிறக்கப்படவில்லை. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தொடக்க வீரரான இஷான் கிஷன் மிடில் ஆர்டரில் களமிறக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் சஞ்சு சாம்சன் களமிறங்க வாய்ப்புகள் இல்லை என்றே பார்க்கப்படுகிறது. ஒருநாள் கிரிக்கெட்டில் 60க்கும் அதிகமான பேட்டிங் சராசரி வைத்துள்ள சஞ்சு சாம்சன், கடந்த முறை வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தின் போது ஒரு போட்டியில் இந்திய அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தார். இதனால் ஏதேனும் மாயாஜாலம் நிகழ்ந்தால் மட்டுமே சஞ்சு சாம்சன் களமிறங்க வாய்ப்புகள் உள்ளது. இல்லையென்றால் ரோகித் சர்மாவின் செல்லப் பிள்ளையான இஷான் கிஷனே மிடில் ஆர்டரில் களமிறங்குவார் என்று ரசிகர்களிடையே கருத்து நிலவி வருகிறது.