பெங்களூர்: இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்கள் அனைவரும் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (CoE) நடைபெறும் உடற்தகுதி முகாமில் பங்கேற்று விட்ட நிலையில், நட்சத்திர வீரர் விராட் கோலி குறித்து எந்தத் தகவலும் வெளியாகாதது, அவர் ஒருநாள் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறப் போகிறாரா என்ற கேள்வியை எழுப்பி, ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, ஒருநாள் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தி வரும் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, ஐபிஎல் தொடருக்குப் பிறகு முதல் முறையாக இந்த உடற்தகுதி முகாமில் பங்கேற்றார். அவருடன் டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில், ஜஸ்பிரித் பும்ரா, வாஷிங்டன் சுந்தர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் அனைவரும் இந்த முகாமில் கலந்துகொண்டு, யோ-யோ டெஸ்ட் உள்ளிட்ட பல்வேறு உடற்தகுதி சோதனைகளை செய்து அதில் தேர்ச்சி அடைந்தனர். ரோஹித் சர்மாவும் தேர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது. .

"பிசிசிஐ-யின் மத்திய ஒப்பந்தத்தில் உள்ள அனைத்து வீரர்களும் இந்த பருவத்திற்கு முந்தைய உடற்தகுதி சோதனையில் பங்கேற்பது கட்டாயம். இது வீரர்களின் உடற்தகுதியை மதிப்பிட உதவுகிறது" என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அனைத்து வீரர்களும் இந்த முகாமில் பங்கேற்று விட்ட நிலையில், விராட் கோலி குறித்து பிசிசிஐ-க்கு எந்தத் தகவலும் இல்லை என்பதுதான் தற்போதைய பேசுபொருளாகி இருக்கிறது. 2024 டி20 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு அந்த வடிவத்திலிருந்தும், 2025 மே மாதம் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்ற கோலி, தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடர் முடிந்ததிலிருந்து, அவர் தனது குடும்பத்துடன் இங்கிலாந்தில் தங்கியுள்ளார்.
சமீபத்தில் லண்டனில் தீவிர உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை அவர் பகிர்ந்துகொண்டாலும், பிசிசிஐ-யின் கட்டாய முகாமுக்கு அவர் வருவாரா, மாட்டாரா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் கடைசியாக 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில்தான் சர்வதேசப் போட்டியில் விளையாடினர். ரோஹித் தலைமையில் 12 ஆண்டு கால ஐசிசி கோப்பை வறட்சியை இந்திய அணி முடிவுக்குக் கொண்டு வந்த அந்தத் தொடரில், கோலி 5 போட்டிகளில் 218 ரன்கள் குவித்து, இந்திய அணியின் இரண்டாவது அதிகபட்ச ரன் குவித்த வீரராகத் திகழ்ந்தார்.
2027 உலகக் கோப்பை வரை தங்களது கிரிக்கெட் வாழ்க்கையை நீட்டிக்க இருவரும் திட்டமிட்டுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்குத் தயாராகும் விதமாக, இந்தியா 'ஏ' அணிக்காக ரோஹித்தும், கோலியும் விளையாட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், பிசிசிஐ நடத்தும் இந்த முக்கிய முகாமை கோலி தவிர்ப்பதன் பின்னணி என்ன என்பது புரியாத புதிராகவே உள்ளது. விராட் கோலி தற்போது லண்டனில் வசித்து வருவதால் அங்கிருந்து வந்து இந்த முகாமில் பங்கேற்பார் எனவும் அவரது ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.