பல்லேக்கல்லே : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு 270 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது. 4 ஆண்டுகளுக்கு பிறகு 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் மோதியதால், ரசிகர்கள் மத்தியில் பெஐம் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. மழை மேகங்கள் சூழ்ந்து, ஆட்டம் அவ்வப்போது தடைப்பட்டது. இதனால், ரைசிகர்களும் ஏமாற்றம் அடைந்தனர். ஒரு வழியாக ஆட்டம் தொடங்கிய போது கேப்டன் ரோகித் சர்மா , ஷாகின் ஆப்ரிடி பந்துவீச்சில் 11 ரன்களில் போல்ட் ஆனார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 4 ரன்களில் வெளியேறினார். காயத்திலிருந்து குணமடைந்த பிறகு முதல் போட்டியில் விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் 14 ரன்களில் பெவிலியன் திரும்பினார். டெஸ்ட் இன்னிங்ஸ் போல விளையாடி தடுமாறிய கில் 32 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
இதனால் 66 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. இந்தியா 150 ரன்களில் சுருண்டு விடும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா ஜோடி இன்ப அதிர்ச்சி கொடுத்தது. இருவரும் அபாரமாக விளையாடி சரிவிலிருந்த அணியை மீட்டனர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் பாகிஸ்தான் வீரர்களும் தடுமாறினர்.
இஷான் கிஷன், ஹர்திக் அடுத்தடுத்து அரைசதம் கடக்க, 5வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 138 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக விளையாடிய இஷான் கிஷன் 81 பந்துகளில் 82 ரன்கள் சேர்த்தார். இதில் 9 பவுண்டரிகளும், 2 சிக்சரும் அடங்கும். அதிரடியாக விளையாடிய ஹர்திக் 90 பந்துகளில் 87 ரன்கள் சேர்த்தார். இதில் 7 பவுண்டரிகளும், 1 சிக்சரும் அடங்கும்.
இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இந்திய அணி மீண்டும் சரிவை சந்தித்தது. இறுதியில் ஜடேஜா 14 ரன்களும், பும்ரா 16 ரன்களும் எடுக்க 48.5வது ஓவர் முடிவில் இந்திய அணி 266 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பாகிஸ்தான் பந்துவீச்சு தரப்பில் ஆப்ரிடி 4 விக்கெட்டுகளும், நஷிம் ஷா 3 விக்கெட்டுகளையும் எடுத்தனர். ஆசிய கோப்பை வரலாற்றில் வேகப்பந்துவீச்சாளர்கள் மொத்தம் 10 விக்கெட்டுகளையும் எடுத்தது, இது முதல் முறை.