சென்னை: சமீபத்தில் முடிவடைந்த இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்களான ரிங்கு சிங், சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோர் பவுலிங் செய்து வெற்றியை தேடி கொடுத்தனர். அதேபோல் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் கேப்டன் ரோஹித் சர்மாவும் பவுலிங் செய்திருந்தார்.
இது இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் தாக்கமாகவே பார்க்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் டெல்லி பிரீமியர் லீக் தொடரில் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் ஒரு ஓவரை வீசி ஆச்சரியம் கொடுத்தார். கடந்த சில ஆண்டுகளாக பேட்ஸ்மேன்கள் பவுலிங் செய்வார்களா என்ற இந்திய ரசிகர்கள் ஏங்கிய சூழலில், தற்போது விக்கெட் கீப்பர் கூட பவுலிங் செய்ய தயாராகி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

அந்த வகையில் புஜ்ஜி பாபு தொடரில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்ட இஷான் கிஷன், புஜ்ஜி பாபு தொடரில் ஜார்க்கண்ட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். மத்தியப் பிரதேச அணிக்கு எதிரான முதல் போட்டியில் முதல் இன்னிங்ஸில் சதம் விளாசிய இஷான் கிஷன், 2வது இன்னிங்ஸில் கடைசி வரை களத்தில் இருந்து வெற்றிக்கு காரணமாக அமைந்தார்.
இதன் மூலம் இஷான் கிஷன் தனது திறமையை நிரூபித்து ஃபார்முக்கு திரும்பியுள்ளதாக பாராட்டுகள் எழுந்தன. அதேபோல் விக்கெட் கீப்பிங்கிலும் சிறப்பாக செயல்பட்டிருந்தார். தற்போது இஷான் கிஷன் பவுலிங் செய்துள்ள சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. விக்கெட் கீப்பிங் மட்டுமல்லாமல் பந்துவீசவும் தயார் என்று கிஷன் நிரூபித்துள்ளார்.
ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஜார்க்கண்ட் அணி முதல் இன்னிங்ஸில் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. பின்னர் ஐதராபாத் அணி களமிறங்கி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ரன்கள் சேர்த்திருந்தது. அப்போது இடதுகை பேட்ஸ்மேனான ரவி தேஜா களத்தில் இருந்த போது, இஷான் கிஷன் ஆஃப் ஸ்பின் வீசி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார்.

இஷான் கிஷன் பவுலிங் செய்த வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. இதுவரை இந்திய அணிக்காகவோ அல்லது ஐபிஎல் தொடரிலோ இஷான் கிஷன் ஒருமுறை கூட பவுலிங் செய்ததில்லை. ஆனால் முதல்தர போட்டிகளில் இதுவரை இஷான் கிஷன் 5 ஓவர்கள் வீசி இருப்பது குறிப்பிடத்தக்கது.