சென்னை: இந்திய அணியின் இளம் தொடக்க வீரரான இஷான் கிஷன் ஒழுங்கீன செயல்பாடு காரணமாக பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டார். இதன்பின் நடந்த ஐபிஎல் தொடரிலும் இஷான் கிஷன் பேட்டிங்கில் நிரூபிக்காததால், இந்திய அணி நிர்வாகம் மொத்தமாக புறக்கணித்தது. தொடர்ந்து தேர்வு குழுவின் அட்வைஸால் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ள ஒப்புக் கொண்டார்.
இதன் முதல் படியாக புஜ்ஜி பாபு தொடரில் ஜார்க்கண்ட் அணியின் கேப்டனாக இஷான் கிஷன் களமிறங்கினார். மத்தியப் பிரதேச அணிக்கு எதிரான முதல் போட்டியிம் முதல் இன்னிங்ஸிலேயே சதம் அடித்த இஷான் கிஷன், 2வது இன்னிங்ஸில் கடைசி வரை களத்தில் இருந்து வெற்றியை தேடி கொடுத்தார். இதனால் இஷான் கிஷன் இந்திய அணிக்கு விரைவில் திரும்புவார் என்று பாராட்டப்பட்டது.

இதன்பின் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஜார்க்கண்ட் அணி விளையாடியது. இந்த போட்டியில் இஷான் கிஷன் முதல் இன்னிங்ஸில் 1 ரன்னிலும், 2வது இன்னிங்ஸில் 5 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்திருக்கிறார். இரு இன்னிங்ஸ்களிலும் ஐதராபாத் அணியின் இடதுகை ஸ்பின்னரான தனய் தியாகராஜனிடம் விக்கெட்டை பறிகொடுத்திருப்பது தான் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
லெக் ஸ்பின்னர்களை எளிதாக அட்டாக் செய்ய கூடிய இடதுகை பேட்ஸ்மேன்கள். அப்படியான ஸ்பின்னரிடம் 2 முறையும் இஷான் கிஷன் விக்கெட்டை பறிகொடுத்திருக்கிறார். இந்த போட்டியில் மட்டும் தனய் தியாகராஜன் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் காரணமாக ஐதராபாத் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்று ஜார்க்கண்ட் அணியை வீழ்த்தியுள்ளது.
இதனால் இஷன் கிஷனின் பேட்டிங் ஃபார்ம் குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன. புஜ்ஜி பாபு தொடரை தொடர்ந்து இஷான் கிஷன் துலீப் டிராபி தொடரிலும் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார். தொடக்க காலம் முதலே இஷான் கிஷனுக்கு கன்சிஸ்டன்சி பிரச்சனை இருப்பதால், அவரால் தொடர்ந்து ரன்கள் சேர்க்க முடியுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் உள்ளது.
ஒருவேளை இஷான் கிஷன் புஜ்ஜி பாபு தொடரை தொடர்ந்து துலீப் டிராபி தொடரிலும் சொதப்பினால், இந்திய அணிக்கு திரும்பும் கனவை மொத்தமாக மறந்துவிட வேண்டியது தான். இதன்பின் மீண்டும் ரஞ்சி டிராபி தொடரில் திறமையை நிரூபித்து தான் இந்திய அணிக்கு இஷான் கிஷன் திரும்ப முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.