சென்னை: தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரின் போது இந்திய அணியின் விக்கெட் கீப்பராக கேஎல் ராகுல் தேர்வு செய்யப்பட்டார். இதனால் அதிருப்தியடைந்த இஷான் கிஷன், மனசோர்வை காரணமாக கூறிவிட்டு நாடு திரும்பினார். அதுமட்டுமல்லாமல் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு எதிரான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதன்பின் இந்திய அணி நிர்வாகம் தரப்பில் ரஞ்சி டிராபி தொடரில் விளையாட அறிவுறுத்தப்பட்டது. ஆனால் இஷான் கிஷன் மறுத்துவிட்டு ஐபிஎல் தொடருக்கு தயாராகி வந்தார். இதன் காரணமாக பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்து இஷான் கிஷன் அதிரடியாக நீக்கப்பட்டார். தொடர்ந்து ஜிம்பாப்வே டி20 தொடர், இலங்கை ஒருநாள் மற்றும் டி20 தொடரிலும் இஷான் கிஷன் தேர்வு செய்யப்படவில்லை.

பின்னர் பிசிசிஐ நிர்வாகிகளின் அட்வைஸ் காரணமாக உள்நாட்டு போட்டிகளில் விளையாட இஷான் கிஷன் ஒப்புக் கொண்டார். அதன் முதல் தொடராக புஜ்ஜிபாபு தொடரில் ஜார்க்கண்ட் அணியின் கேப்டனாக இஷான் கிஷன் களமிறங்கினார். மத்திய பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் ஜார்க்கண்ட் அணி விளையாடி வருகிறது.
இந்த போட்டியில் இஷன் கிஷன் பேட்டிங் செய்த போது 92 ரன்கள் சேர்த்திருந்தார். வழக்கமாக சதத்தை நெருங்கும் போது சச்சின் டெண்டுல்கரே பதற்றமாக இருப்பார். இந்த நிலையில் இஷான் கிஷன் அடுத்த 2 பந்துகளில் 2 சிக்சர்களை விளாசி சதத்தை எட்டினார். அதில் ஆஃப் சைடில் இஷான் கிஷன் அடித்த ஷாட் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் மூலமாக இஷான் கிஷன் தனது திறமையை முதல் வாய்ப்பிலேயே நிரூபித்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். ஏற்கனவே இந்திய அணியின் டாப் ஆர்டரில் இடதுகை பேட்ஸ்மேன்களுக்கான தேவை உள்ளது. இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது இடதுகை பேட்ஸ்மேன் விளையாட வேண்டும் என்பதில் கம்பீர் தீவிரமாக இருந்தார்.
இதனால் வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் இஷான் கிஷன் தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. கடந்த 8 மாதங்களாக இஷான் கிஷன் மோசமான பிரச்சனைகளை சந்தித்து வந்த நிலையில், இறுதியாக திறமையை நிரூபித்து அசத்தியுள்ளார்.