கொழும்பு: பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆசியக் கோப்பை போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் இருவரில் யார் களமிறங்க உள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.
ஆசியக் கோப்பை தொடரில் நாளை இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. இந்தப் போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்று இரு அணிகள் வரிந்து கட்டி நிற்கின்றன. சும்மாவே இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் அனல் பறக்கும். தற்போது உலகக்கோப்பைத் தொடர் நெருங்குவதால், இரு அணிகளும் மோதவுள்ளது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே ஆசியக் கோப்பை தொடரின் குரூப் போட்டிகளில் கேஎல் ராகுல் விளையாட மாட்டார் என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்திருந்தார். இதனால் மிடில் ஆர்டர் மற்றும் விக்கெட் கீப்பர் பணி எந்த வீரருக்கு வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்தது. ஏனென்றால் மாற்று விக்கெட் கீப்பரான சஞ்சு சாம்சன் மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடி இருக்கிறார்.
இன்னொரு பக்கம் விக்கெட் கீப்பர் மற்றும் இடதுகை பேட்ஸ்மேனாக இஷான் கிஷன் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் கூட 3 அரைசதங்கள் விளாசி சாதனை படைத்தார். இதனால் இருவரில் ரோகித் சர்மா யாரை தேர்வு செய்வார் என்ற கேள்வி எழுந்துகொண்டே இருந்தது. ரசிகர்களின் குழப்பத்திற்கு இஷான் கிஷன் எந்த பேட்டிங் வரிசையில் களமிறங்குவார் என்பதே காரணமாகியது.
ஏனென்றால் இஷான் கிஷன் இதுவரை இந்திய அணிக்காக மிடில் ஆர்டரில் களமிறங்கியதே இல்லை. ஐபிஎல் தொடரில் கூட 4வது இடத்தில் தான் ஆடி இருக்கிறாரே தவிர, 5வது இடத்தில் இஷான் கிஷன் விளையாடியதே இல்லை. இவருக்காக பேட்டிங் வரிசையை மாற்றினால், உலகக்கோப்பையிலும் பிரச்சனை உண்டாகும் வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில் இஷான் கிஷன் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரில் யாரை ரோகித் சர்மா தேர்வு செய்வார் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இஷான் கிஷனை 5வது இடத்தில் இறக்க ரோகித் சர்மா முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக ஜடேஜா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோருடனே இஷான் கிஷன் பேட்டிங் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். இதனால் உலகக்கோப்பை அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.