அதிரடி தொடக்கம்
இப்போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்து, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக திரிபாதி 45 ரன்களும், நிதிஷ் ராணா 37 ரன்களும் எடுத்தனர். இறுதிக் கட்டத்தில் ரஸல் 20 ரன்களும், தினேஷ் கார்த்திக் 26 ரன்களும் விளாசி சிறப்பான கேமியோ ரோல்ஸ் விளையாட, அந்த அணி 171 ரன்கள் குவித்தது. சென்னை அணியில் பிராவோவுக்கு பதில் அணியில் சேர்க்கப்பட்ட சாம் கர்ரனின் 4 ஓவர்களில் 56 ரன்கள் விளாசப்பட்டது. இதையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், வழக்கம் போல் ருதுராஜ் கெய்க்வாட், டு பிளசிஸ் தொடக்க வீரர்களாக இன்னிங்ஸை தொடங்கினர்.
74 ரன்கள் பார்ட்னர்ஷிப்
இதில், ருதுராஜ் - டு பிளசிஸ் ஜோடி வழக்கம் போல் எதிரணி பவுலர்களை அடித்து விளாசத் தொடங்கியது. ஃபாஸ்ட், ஸ்பின் என்று மாறி மாறி கொல்கத்தா பவுலர்களை இருவரும் விளாசினார்கள். குறிப்பாக, கொல்கத்தா அணியின் பலமான மிஸ்ட்ரி ஸ்பின்னர்களான சுனில் நரேன் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஓவர்களை மிகச் சிறப்பாக எதிர்கொண்டார்கள். அதிலும், 2 ஓவர்கள் வீசிய சுனில் நரைன் ஓவரில் 25 ரன்கள் விளாசப்பட்டது. எகானமி 12.50. எனினும், ரஸல் ஓவரில் எட்ஜ் ஆன ருதுராஜ் 28 பந்துகளில் 40 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதில், 2 பவுண்டரிகளும் 3 சிக்ஸர்களும் அடங்கும். அதேபோல், டு பிளசிஸ் 30 பந்துகளில் 43 ரன்கள் எடுத்திருந்த போது பிரசித் ஓவரில் கேட்ச்சானார். டு பிளசிஸ் சிக்ஸர்கள் அடிக்கவில்லை என்றாலும் 7 பவுண்டரிகளை விளாசியிருந்தார். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 74 ரன்கள் சேர்த்தனர்.
வருண் vs தோனி
பிறகு சென்னை அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரியத் தொடங்கியது. மொயீன் அலி 32 ரன்களிலும், அம்பதி ராயுடு 10 ரன்னிலும், சுரேஷ் ரெய்னா 10 ரன்னிலும் அவுட்டாக, போட்டி மெல்ல மெல்ல கொல்கத்தா வசம் சென்றது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் எம்எஸ் தோனி, வருண் சக்கரவர்த்தி ஓவரில் வெறும் 1 ரன்னில் போல்டானார். ஐபிஎல் தொடரில் 4 போட்டிகளில், 3ல் வருண் சக்கரவர்த்தி ஓவரில் தோனி அவுட்டாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
விளாசிய ஜடேஜா
தோனி அவுட்டான பிறகு, கொல்கத்தா முழுவதும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. அப்போது காலத்தில் இருந்தது ஜடேஜாவும், ஷர்துல் தாகூரும் தான். 19வது ஓவரை பிரசித் கிருஷ்ணா வீசினார். அப்போது சென்னை அணியின் வெற்றிக்கு தேவை 12 பந்துகளில் 26 ரன்கள். பிரசித் வீசிய முதல் இரு பந்தில் 2 ரன்கள் எடுக்கப்பட, மூன்றாவது பந்தில் backward square-ல் பட்டாசு போல ஒரு சிக்ஸரை பறக்கவிட்டார். அதற்கு அடுத்த பந்தில், ஸ்ட்ரெய்ட்டில் ஒரு மெகா சிக்ஸரை பறக்கவிட்டார். கடைசி இரு பந்தில் இரு அருமையான பவுண்டரிகளை தெறிக்கவிட அந்த ஓவரில் மட்டும் 22 ரன்கள் விளாசப்பட்டது. 1,1,6,6,4,4.
ஓப்பனாக பேசிய தோனி
கடைசி ஓவரில் வெற்றிக்கு 4 ரன்கள் மட்டும் தேவைப்பட்ட நிலையில், சுனில் நரைன் ஓவரில் 2 விக்கெட்டுகள் விழுந்தாலும் கடைசி பந்தில் தீபக் சாஹர் சிங்கிள் அடித்து அணியை வெற்றிப் பெற வைத்தார். இதனால் ரசிகர்களின் உச்சக்கட்ட பிரஷரை எகிற வைத்த போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் கடைசி பந்தில் வெற்றிப் பெற்று, 10 போட்டிகளில் 8வது வெற்றியை பதிவு செய்து, 16 புள்ளிகளுடன், புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேறியது. இந்த போட்டி குறித்து பேசிய தோனி, "இது ஒரு நல்ல வெற்றி. சில நேரங்களில் நீங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடுவீர்கள், நீங்கள் தோற்பீர்கள். அதேசமயம், நீங்கள் நன்றாக விளையாடபோது வெற்றிப் பெறுகிறீர்கள் என்றால், அதனை மகிழ்ச்சியுடன் அனுபவித்துவிட வேண்டும். இரு தரப்பிலிருந்தும் நல்ல கிரிக்கெட் விளையாடப்பட்டது. அது பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. நாங்கள் நன்றாக பந்து வீசினோம். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இது எளிதானது அல்ல. 170 என்பது ஒரு நல்ல ஸ்கோர் என்று நான் நினைத்தேன். முக்கியமான விஷயம் என்னவென்றால், நாம் கற்றுக்கொண்டவற்றைப் பயன்படுத்திக் கொண்டு மீண்டும் வலுவாக வர வேண்டும்" என்று கூறியுள்ளார்.