சென்னை: ஐ.பி.எல். ஏலத்துக்கான இறுதிப் பட்டியலில் இலங்கை அணியின் 9 வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். யாழ்ப்பாணம் கல்லூரி மாணவர் விஜயகாந்த் வியஸ்காந்த் பெயரும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் வரும் 18-ந் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.
இந்த ஏலத்தில் பங்கேற்க மொத்தம் 1,114 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். இதில் இருந்து ஏலத்துக்கான 292 வீரர்கள் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் இலங்கையின் குசல் பெரேரா, திஸர பெரேரா, கெவின் கொத்திகொட, மஹேஷ் தீக்சன, விஜயகாந்த் வியஸ்காந்த், துஷ்மந்த சமீர, வனிந்து ஹசரங்க, தசுன் ஷானக, இசுறு உதான ஆகிய 9 பேர் இடம்பிடித்துள்ளனர்.
இவர்களில் 19 வயதாகும் விஜயகாந்த் வியஸ்காந்த் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞர். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மாணவரான விஜயகாந்த் வியஸ்காந்த், லங்கா பிரீமியர் லீக் போட்டிகளில் யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அணிக்காக விளையாடியவர். 2018-ம் ஆண்டு இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட தேசிய கிரிக்கெட் அணியில் விஜயகாந்த் வியஸ்காந்த் தேர்வானார். இலங்கையில் 40 ஆண்டுகளுக்குப் பின்னர் தேசிய கிரிக்கெட் அணிக்கு தேர்வான யாழ்ப்பாணம் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்றவர் விஜயகாந்த் வியஸ்காந்த்.
19 வயதுக்குட்பட்ட சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விஜயகாந்த் வியஸ்காந்த் விளையாடி உள்ளார். 19 வயதுக்குட்பட்ட முதலாவது ஆசிய உலகக் கிரிக்கெட் போட்டிகான இலங்கை அணியில் விஜயகாந்த் வியஸ்காந்த் இடம்பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.