மும்பை : சர்வதேச கிரிக்கெட்டிலே தற்போது சிறந்த வீரர் என்றால் அது பும்ரா தான். டி20 உலக கோப்பையில் தொடர் நாயகன் விருது வென்ற பும்ரா, இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். பும்ரா இந்தியாவின் பொக்கிஷம் என்று விராட் கோலியே பாராட்டும் அளவிற்கு அவரது செயல்பாடு இருந்தது.
இந்த நிலையில் சிறந்த பந்துவீச்சு இனிமேல் தான் வரப்போகிறது என்று பிரட்லீ எச்சரிக்கை விடுத்திருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரட்லீ, பெஞ்சமின் பட்டன் படத்தில் எப்படி பிராட் பிட் வயது ரிவர்ஸில் போகுமோ அதை போல் பும்ராவின் சிறந்த செயல்பாடு இனிமேல் தான் வரப்போகிறது.

பும்ராவின் பந்துவீச்சு இந்த காலத்தில் மட்டுமல்ல எந்த காலத்தில் உள்ள பேட்ஸ்மேன்களுக்கும் கடும் நெருக்கடியை தரும் என்றும் அவர் கூறியுள்ளார். இது குறித்து மேலும் பேசிய பிரட்லீ, பும்ரா புதிய பந்தை பயன்படுத்தி அதி வேகமாக வீசுகிறார். இதுபோன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் சரியான லென்த் மற்றும் லைனில் பந்தை தொடர்ந்து வீசுகிறார்.
இதைப் போன்று வெள்ளை நிற கிரிக்கெட் பந்தையும் அவர் அபாரமாக வீசி நெருக்கடி கொடுக்கின்றார். பும்ராவை நீங்கள் பந்துவீச்சு தொடக்கத்திலும் பயன்படுத்தலாம். இதே போன்று டெத் ஓவரிலும் பயன்படுத்தலாம். ஒரு ஓவருக்கு 12- 13 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற இறுதி கட்டத்தில் பேட்ஸ்மேன்கள் இருந்தால் பும்ரா அபாரமாக யாக்கர்கள் வீசுவார்.
இந்த பந்துகளை எதிர்கொள்வது மிகவும் கடினம். எனவே பும்ரா எந்த காலத்திலும் ஒப்பிட்டு பார்த்தால் அவர் உலகத்தரம் வாய்ந்த வீரர் தான். பும்ராவின் கிரிக்கெட் வாழ்க்கை முன்னேறி வருவதை நான் பார்த்து சந்தோஷப்படுகிறேன். பும்ராவுடன் இணைந்து பணியாற்றியதும், அவர் வீசும் போது கிரிக்கெட் வர்ணனையும் செய்வதையும் நான் மகிழ்ச்சியுடன் செய்கின்றேன்.
இதைப் போன்று ரோகித் சர்மா சிறந்த கேப்டனாக விளங்குகிறார். பும்ராவை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று ரோகித் சர்மாவுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. பும்ரா இன்னிங்ஸின் தொடக்கத்திலும் பந்து வீசலாம், நடுவிலும் பந்து வீசலாம் இறுதி கட்டத்திலும் பந்து வீசலாம். இதை வைத்து முக்கிய கட்டத்தில் ரோகித் சர்மா எதிரணிக்கு நெருக்கடி ஏற்படுத்தி இருக்கிறார் என்று பிரட்லீ பாராட்டியுள்ளார்.