"பும்ராவின் பந்துவீச்சு டெக்னிகலாக சரியில்லை அதனால்தான்..".. முன்னாள் வீரர் ராஜு குல்கர்னி சர்ச்சை
மும்பை: இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சு நுட்பம் (Technical) சரியானதாக இல்லை என்றும், இதனால் தான் அவர் அடிக்கடி காயமடைகிறார் என்றும் முன்னாள் இந்திய வீரர் ராஜு குல்கர்னி விமர்சித்துள்ளார். சமீபத்தில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது கார்டிஃப் நகரில் நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியின் போது பும்ராவுக்கு இடது முழங்காலில் காயம் ஏற்பட்டது. அதன் காரணமாக, இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து பும்ரா விலகியுள்ளார்.
ராஜு குல்கர்னி கடந்த 1983 முதல் 1987 வரை இந்திய அணிக்காக 3 டெஸ்ட் மற்றும் 10 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். தற்போது அவருக்கு 63 வயது ஆகிறது. அவர் பும்ராவின் உடற்தகுதி குறித்துப் பேசுகையில், "பும்ரா இந்தியாவின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்பதில் சந்தேகமில்லை. அவர் நமது தங்கமகன். ஆனால், கபில் தேவ், ரிச்சர்ட் ஹாட்லி போல அவரது பந்துவீச்சு நுட்பம் சரியானதாக இல்லை. அவரது விசித்திரமான பந்துவீச்சு முறை அவரது உடலுக்கு அதிக அழுத்தத்தைக் கொடுக்கிறது. இதனால் தான் அவர் அடிக்கடி காயமடைகிறார்" என்று கூறினார்.

மேலும், பும்ரா மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் தொடர்ந்து விளையாடுவது சாத்தியமற்றது என்று குல்கர்னி சுட்டிக் காட்டினார். "பும்ரா ஐபிஎல், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட விரும்பினாலும், அவரால் அனைத்து வடிவங்களிலும் தொடர்ந்து நீடிக்க முடியாது. எனவே, அணி நிர்வாகம் அவரை மிகவும் முக்கியமான டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்" என்று அவர் கூறினார்.
பும்ராவின் பணிச்சுமையைக் குறைக்க மூத்த வீரர்களான முகமது ஷமி மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோரை மீண்டும் அணிக்குக் கொண்டு வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். "முகமது சிராஜுடன் இணைந்து ஷமி, புவனேஷ்வர் குமார் போன்ற மூத்த வீரர்கள் விளையாடினால் பும்ரா மீதான அழுத்தம் குறையும். புவனேஷ்வரை டி20 போட்டிகளிலும், ஷமி மற்றும் சிராஜை டெஸ்ட் போட்டிகளிலும் சுழற்சி முறையில் பயன்படுத்த வேண்டும்," என்றார்.


Click it and Unblock the Notifications
